கோலாலம்பூர், ஜன 16 – செங்கடலில் ஹவ்தி தரப்பு மேற்கொண்டுவரும் தாக்குதலால் மலேசியாவின் உணவு இறக்குமதி பாதிக்காது என விவசாயம் மற்றும் உணவு உத்தரவாத அமைச்சர் முகமட் சாபு தெரிவித்திருக்கிறார். செங்கடல் வழியாக மலேசியா அதிகமான உணவுப் பொருட்களை இறக்குமதி செய்யாததே இதற்கு காரணம் என அவர் கூறினார். செங்கடல் பகுதியில் நிலைமையை தமது அமைச்சு தொடர்ந்து கண்காணித்து வருகிறது. ஹவ்தி தரப்பினர் தொடர்ந்து தாக்குதலில் ஈடுபட்டால் எண்ணெய் மற்றும் எரிவாயுவை ஏற்றிவரும் கப்பல்களின் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படலாம் . அப்படியொரு சூழ்நிலை ஏற்பட்டால் கப்பல்களின் சுமுகமான போக்குவரத்திற்கும் பிரச்னை ஏற்படும். செங்கடல் பகுதியில் எண்ணெய் கப்பல்கள் நடமாட்டத்திற்கு சிக்கல் ஏற்பட்டால் உலகப் பொருளாதாரத்திற்கும் பாதிப்பு ஏற்படும் என முகமட் சாபு தெரிவித்தார்.