கோலாலம்பூர், மார்ச் 26 – “கேப்டன் சுரேந்திரன்” என பயணிகளால் அன்போடு அழைக்கப்படும் பினாங்கு ரேபிட் பேருந்து ஓட்டுனர் ஒருவரின் செயல், இணையவாசிகளை நெகிழ செய்துள்ளதோடு, பாராட்டுகளையும் பெற்றுள்ளது.
சுரேந்திரனின் கருணையால் நெகிழ்ந்த சிசிலியா எனும் பெண் பயணி ஒருவர், தனது அனுபவத்தை Penang Indian Networks எனும் முகநூலில் பதிவிட்டுள்ளார்.
இம்மாதம் 20-ஆம் தேதி, பதிவிடப்பட்டுள்ள 56 வினாடி காணொளியில், தனது பேருந்தை பயன்படுத்திய சக்கர நாற்காலி மாற்றுத் திறனாளி ஒருவர், சாலையை கடந்து செல்ல கேப்டன் சுரேந்திரன் உதவும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.
“கேப்டன் சுரேந்திரனுக்கு எனது பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன். சிறந்த சேவையை வழங்குவதில் அவரது அர்ப்பணிப்பு பாராட்டுக்குரியது” என அந்த காணொளியின் கீழ் சிசிலியா பதிவிட்டுள்ளார்.
அந்த காணொளியை நேற்று வரை ஒரு லட்சத்து 34 ஆயிரம் பேர் பார்வையிட்டுள்ள வேளை ; கேப்டன் சுரேந்திரனுக்கு வாழ்த்துகளும் பாராட்டுகளும் குவிந்து வருகின்றன.
குறிப்பாக, “உதவி தேவைப்படுவோருக்கு, உங்கள் நேரத்தை ஒதுக்கி சிறந்த சேவை புரியும் உங்கள் அர்ப்பணிப்பு போற்றுதலுக்கு உரியது” என இணையப் பயனர் ஒருவர் பதிவிட்டுள்ள வேளை ;
“நீங்கள் தான் இந்நாட்டின் சிறந்த குடிமகன். உங்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள்” என மற்றொருவர் குறிப்பிட்டுள்ளார்.