போர்ட் டிக்சன் , பிப் 1 – பிட்கொய்ன் முதலீடு திட்டத்தை நம்பி அதில் முதலீடு செய்த பெண் ஒருவர் 115,000 ரிங்கிட்டை இழந்தார். இந்த விவகாரம் தொடர்பாக பாதிக்கப்பட்ட 60 வயதுடைய பெண் போட்டிக்சன் போலீஸ் தலைமையகத்தில் வர்த்தக குற்றப் பிரிவில் புகார் செய்ததை போர்ட்டிக்சன் போலீஸ் தலைவர் சுப்ரிடெண்டன்ட் ஐடி ஷாம் முகமட் உறுதிப்படுத்தினார். வாட்ஸ்அப் மூலம் அறிமுகமான ஆடவர் ஒருவர் பிட்கொய்ன் முதலீடு திட்டத்தை அறிமுகம் செய்ததாகவும் அப்பெண் தமது புகாரில் தெரிவித்துள்ளார். இந்த முதலீட்டுத் திட்டத்தில் முதலீடு செய்தால் நல்ல வருமானம் கிடைக்கும் என உறுதியளிக்கப்பட்டதால் அதனை நம்பி கடந்த டிசம்பர் மாதம் 19ஆம் தேதி முதல் ஜனவரி 12-ஆம் தேதி வரை வெவ்வேறு வங்கிக் கணக்குகளில் தமது சேமிப்பில் இருந்த 115,000 ரிங்கிட் பணத்தை அவர் பட்டுவாடா செய்துள்ளார்.
தமக்கு சொந்தமான “Accerx” செயலி கணக்கில் பெரிய அளவில் பணம் சேர்ந்ததை அறிந்து அந்த தொகையை மீட்டுக்கொள்ள முயன்றபோது மேலும் முதலீடு செய்யும்படி கேட்டுக்கொள்ளப்பட்டதால் அப்பெண் அதிர்ச்சியடைந்தார். இதனைத் தொடர்ந்து தாம் ஏமாற்றப்பட்டதாக உணர்ந்த அப்பெண் போலீசில் புகார் செய்துளளார். குற்றவியல் சட்டத்தின் 420 ஆவது விதியின் கீழ் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக சுப்ரிடெண்டன்ட் ஐடி ஷாம் முகமட் தெரிவித்தார்.