கோலாலம்பூர், பிப்ரவரி 28 – பஹாங், ரவுப் அருகே நடைபெற்று வரும் “பன்பேர்” கேளிக்கை நிகழ்ச்சியில், “ரோலர் கோஸ்டர்” இராட்டினம் ஒன்று தடம் புரண்டதை காட்டும் காணொளி ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளது.
“பெண்டுடுக் ரவுப் பஹாங்” (Penduduk Raub Pahang) முகநூலில் அந்த வீடியோ பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
அந்த வீடியோவில், ரோலர் கோஸ்டர் தடம் புரண்டதன் விளைவாக, சிறுவர் உட்பட வருகையாளர்கள் சிலர் வலியால் துடிப்பதை காண முடிகிறது.
“ரவுப் பன்பேரில் என்ன நடக்கிறது? வருகையாளர்கள் ரோலர் கோஸ்டரில் இருந்து தூக்கியெறியப்படுகின்றனர்” என அந்த காணொளியின் கீழ் பதிவிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், அச்சம்பவத்தில் பாதிக்கப்பட்ட நூர் இஸ்ஸாதி முஹமட் கமில் எனும் பெண், தமக்கு விலா எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதாகவும், தனது மகன் முழங்கால் வீக்கத்திற்கு இலக்காகி இருப்பதாகவும் அந்த பதிவின் கீழ் குறிப்பிட்டுள்ளார்.
அச்சம்பவம் தொடர்பில், தம்மை தொடர்புக் கொண்ட “பன்பேர்” நிர்வாகம், மன்னிப்புக் கோரியதோடு, முழு பொறுப்பேற்பதாக கூறியதாகவும் அப்பெண் பகிர்ந்துள்ளார்.
எனினும், சம்பந்தப்பட்ட “பன்பேர்” கேளிக்கை நிகழ்ச்சியின் பாதுகாப்பு அம்சங்கள் குறித்து, இணையப் பயனர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
பாதுகாப்பு காரணத்தாலேயே, இதுபோன்ற கேளிக்கை நிகழ்ச்சிகளுக்கு செல்வதில்லை என பலர் தொடர்ந்து பதிவிட்டு வருகின்றனர்.