கோலாலம்பூர், டிசம்பர் 6 – சுவாச நோய்களை அதிகரிக்கச் செய்யும் புதிய நோய் கிருமி தோன்றி இருப்பதற்கான ஆதாரம் எதுவும் இதுவரை அடையாளம் காணப்படவில்லை.
அதனால், மலேசியா உட்பட அனைத்துலக சமூகத்திற்கு எச்சரிக்கை விடுக்க வேண்டிய அவசியம் இல்லை.
தற்சமயம் சீனா உட்பட சில உலக நாடுகளில் ஏற்பட்டுள்ள சுவாச நோய்களுக்கு, கோவிட்-19 கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதே காரணம் என, MMA – மலேசிய மருத்துவ சங்கத்தின் தலைவர் டாக்டர் அசிசான் அப்துல் அஜீஸ் தெரிவித்தார்.
குறிப்பாக, சீனாவில் அடையாளம் காணப்பட்டிருப்பது, சாதாரண கிருமி. அதனால், வழக்கமாக வயது குறைந்தவர்கள் அதிகம் பாதிக்கப்படும் சாத்தியம் உள்ளதையும் அசிசான் சுட்டிக் காட்டினார்.
அதனை தவிர்த்து, அனைத்துலக சமூகத்திற்கு எச்சரிக்கை விடுக்கும் அளவிற்கு, வித்தியாசமான அல்லது மாறுபட்ட புதிய நோய்கிருமி எதுவும் இதுவரை அனைத்துலக சுகாதார நிபுணர்கள் அடையாளம் காணவில்லை என்பதை, ஐ.நா-வின் WHO – உலக சுகாதார நிறுவனமும் உறுதிப்படுத்தியுள்ளது.
எனினும், சீனாவின் பரவி வரும் சுவாச நோயை, சுகாதார அமைச்சு அணுக்கமாக கண்காணித்து வருவதாக அசிசான் சொன்னார். முன்னதாக, சீனாவில் பரவி வரும் சுவாச நோய் குறித்து, மக்களிடையே பதற்றத்தை ஏற்படுத்த வேண்டாம் என, அண்மையில் பிரான்ஸ் சுகாதார நிபுணர்கள் சிலர் அறிவுறுத்தி இருந்ததும் குறிப்பிடத்தக்கது.