ஷா ஆலாம், பிப்ரவரி 2 – EV மின்சார வாகனங்களின் உரிமையாளர்களுக்கு, ஆயிரம் பாகை செல்சியஸ் வரை வெப்பத்தை தாங்கக்கூடிய, EV – மின்சார வாகன தீயணைப்பு போர்வைகள் வைத்திருப்பது கட்டாயமாக்கப்படவுள்ளது.
எனினும், அந்த முடிவு வீடமைப்பு ஊராட்சி அமைச்சுடன் மேற்கொள்ளப்படவுள்ள கலந்துரையாடலுக்கு உட்பட்டது என, மலேசிய முதலீட்டு, வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் செனட்டர் தெங்கு டத்தோ ஸ்ரீ ஜப்ருல் தெங்கு அப்துல் அஜிஸ் தெரிவித்தார்.
ஒரு EV மின்சார வாகன தீயணைப்பு போர்வையின் விலை நான்காயிரத்து 800 ரிங்கிட் முதல் ஐயாயிரம் ரிங்கிட் ஆகும்.
அது தீயை விரைந்து அணைக்க உதவும் என்பதோடு, நச்சு வாயு வெளியேற்றத்தையும் கட்டுப்படுத்தும்.
வெகு விரைவில் நம் நாட்டின் சாலைகளில் அதிகம் வலம் வரவுள்ள மின்சார வாகனங்களின் பாதுகாப்பை மேம்படுத்த ஏதுவாக, SIRIM QAS இண்டர்நேஷனல் நிறுவனத்தின், EV தீயணைப்பு போர்வையின் பயன்பாட்டை பார்வையிட்ட பின்னர் தெங்கு ஜப்ருல் செய்தியாளர்களிடம் பேசினார்.
தற்சமயம் அந்த EV தீயணைப்பு போர்வைகளை வைத்திருப்பது, EV மின்சார வாகனங்களுக்கு மின்னூட்டும் சேவையை வழங்கும் நிலையங்கள் மட்டுமே வைத்திருப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.