கோலாலம்பூர், டிசம்பர் 29 – தலைநகர் சுற்று வட்டாரப் பகுதியிலுள்ள 30 உணவு வளாகங்களில், DBKL – கோலாலம்பூர் மாநகர் மன்றம் மேற்கொண்ட அதிரடி சோதனை நடவடிக்கையில், மூன்று உணவு வளாகங்களை உடனடியாக மூட உத்தரவிடப்பட்டது.
அதே சமயம், பல்வேறு குற்றங்களுக்காக 35 அபராதப் பதிவுகள் வெளியிடப்பட்டன.
குறிப்பாக, செபுதே நாடாளுமன்ற தொகுதியிலுள்ள ஜாலான் ஹுஜான் ரஹ்மத், ஜாலான் ராடின் பாகுஸ், ஜாலான் ராடின் தெங்கா; சிகாம்புட் நாடாளுமன்ற தொகுதியிலுள்ள, ஜாலான் லாங் குனிங்; கெபோங் நாடாளுமன்ற தொகுதியில்,ஜாலான் மெட்ரோ பெர்டானா, ஜாலான் டெவெலப்மென்ட் ஆகிய பகுதிகளிலுள்ள, உணவு வளாகங்களை குறிவைத்து அந்த சோதனை மேற்கொள்ளப்பட்டதாக, DBKL ஓர் அறிக்கையின் வாயிலாக தெரிவித்தது.
அதில், 1983ஆம் ஆண்டு உணவு சட்ட விதிமுறைகளை மீறிய அங்காடி உணகவம் ஒன்றை உடனடியாக மூட உத்தரவிடப்பட்ட வேளை ; உணவு உரிம விதிமுறைகளை மீறிய குற்றத்திற்காக இதர இரு உணவகங்கள் மூடப்பட்டன.
அதே சமயம், தொழிலாளர்கள் “டைபாய்டு” தடுப்பூசி போட்டுக் கொள்ளாதது, உணகவம் அசுத்தமாக காணப்பட்டது, திடக்கழிவு பொருட்களை முறையாக அகற்ற தவறியது, சமையலறை பகுதியில் எலிக்கழிவுகள் காணப்பட்டது ஆகிய குற்றங்களுக்காக 35 அபராதப் பதிவுகளும் வெளியிடப்பட்டன.
அதனால், வாடிக்கையாளர்கள் தாங்கள் தேர்வுச் செய்யும் உணவு வளாகம் தூய்மையாக இருப்பதை உறுதிச் செய்துக் கொள்ள வேண்டுமென DBKL அறிவுறுத்தியுள்ளது.