கோலாலம்பூர், நவ 5 – கல்வி அமைச்சர் ஃபாட்லினா சிடேகிற்கு சமூக வலைத்தளம் மூலம் குற்றவியல் மிரட்டலை விடுத்த 28 வயது ஆடவனை போலீசார் கைது செய்தனர்.
கோலாலம்பூர், ஸ்தாப்பாக்கில் நேற்று கைது செய்யப்பட்ட அந்த ஆடவன் மூன்று நாட்களுக்கு தடுத்து வைக்கப்பட்டிருப்பதாக கூட்டரசு குற்றப்புலனாய்வுத்துறை தலைவர் ஸுஹைலி ஜெயின் தெரிவித்திருக்கிறார். இந்த விவகாரம் தொடர்பாக நான்கு புகார்களை போலீஸ் பெற்றுள்ளதாகவும் அவர் வெளியிட்ட அறிக்கையொன்றில் தெரிவித்தார்.
விசாரணை பாதிக்கும் என்பதால் இதன் தொடர்பில் பொதுமக்கள் எவரும் ஆருடங்களைக் கூற வேண்டாம் என ஸுஹைலி கேட்டுக்கொண்டார். எனினும் ஃபாட்லினாவுக்கு எதிராக எத்தகைய மிரட்டல் அல்லது ஏன் இந்த மிரட்டல் விடுக்கப்பட்டது என்ற விவரங்களை ஸுஹைலி வெளியிடவில்லை.
பாலஸ்தீனர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் நிகழ்ச்சி பள்ளிகளில் ஏற்பாடு செய்யப்பட்ட விவகாரம் தொடர்பில் மற்றும் அந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட சில மாணவர்கள் போலி துப்பாக்கிகளை வைத்திருப்பதை கொண்ட புகைப்படங்கள் வெளியாளதை தொடர்ந்து சில தரப்பினரால் கல்வி அமைச்சர் கடுமையான குறைகூறலுக்கு உள்ளானார்.