ஷா அலாம், ஜன 23 – ஷா அலாம், செக்சன் 28-இல் ஆயுதங்களுடன் சண்டையிட்ட இரண்டு ஆடவர்களை போலீசார் கைது செய்தனர். 19 மற்றும் 25 வயதுடைய அந்த இரு சந்தேகப் பேர்வழிகளும் நேற்று அதிகாலை மணி 3.36 அளவில் கைது செய்யப்பட்டதாக ஷா அலாம் போலீஸ் தலைவர் முஹம்மது இக்பால் இப்ராஹிம் தெரிவித்தார். கூடைப்பந்து விளையாடும் இடத்திற்கு அருகே தமக்கு அறிமுகமான ஆடவர் கும்பலால் தாக்கப்பட்டதாக 19 வயதுடைய ஆடவர் போலீசில் புகார் செய்ததைத் தொடர்ந்து , தாம் காயம் அடையும் அளவுக்கு தாக்கப்பட்டதாக இரவு மணி 7.05 அளவில் மற்றொரு சந்தேகப் பேர்வழி புகார் செய்தார். அதனைத் தொடர்ந்து அந்த இரண்டு ஆடவர்களும் கைது செய்யப்பட்டனர். அவ்விருவரும் ஏற்கனவே போதைப் பொருள் மற்றும் இதர குற்றப் பின்னணிகளை கொண்டவர்கள் என்றும் இக்பால் கூறினார். இதற்கு முன்னதாக கட்டை மற்றும் பாராங் கத்தியுடன் ஆடவர் கும்பல் சண்டையிடும் காணொளி முகநூலில் வைரலானது.