கோலாப்பிலா , பிப் 21 – நெகிரி செம்பிலான் கோலாப்பிலாவில் குணுங் அங்சி மலையேறும் பணியில் ஈடுபட்டிருந்தபோது வழிதவறியதால் காணாமல்போனதாக கூறப்பட்ட ஆறு மலையேறிகள் நள்ளிரவு 12 மணியளவில் கண்டுப் பிடிக்கப்பட்டனர். 50 நிமிடங்களுக்குப் பின் அவர்கள் பாதுகாப்புடன் மலையடிவாரத்திற்கு கொண்டுவரப்பட்டதாக நெகிரி செம்பிலான் தீயணைப்பு மற்றும் மீட்புத்துறையின் பயிற்சி பிரிவின் துணை இயக்குனர் Mohd Hafiz Mohd Shariff தெரிவித்தார். அந்த சம்பவத்தின்போது பெண் மலையேறி ஒருவர் தனது இடது காலில் லேசாக காயம் அடைந்தார். மலையேறும் குழுவில் இடம்பெற்றிருந்த நான்கு பெண்கள் மற்றும் இரண்டு ஆடவர்கள் கடல் மட்டத்திலிருந்து 400 மீட்டர் உயரத்தில் நள்ளிரவு மணி 12.05 அளவில் கண்டுப்பிடிக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார்.
மலையிலிருந்து கீழே இறங்குவதற்கு அவர்கள் தேர்வு செய்த பாதை சிரமமானதாகவும் மழையின் காரணமாக மோசமாக இருந்ததால் அவர்கள் களைத்து காணப்பட்டதாக மோஹட் அபிஸ் கூறினார். சிலாங்கூரைச் சேர்ந்த அவர்கள் அனைவரும் மிகவும் பலவீனமான நிலையில் கண்டுப்பிடிக்கப்பட்டனர். அவர்கள் அனைவரும் நேற்று மாலைவரை திரும்பாததால் மலையேறும் குழுவில் இடம்பெற்றிருந்த ஆடவரின் ஒருவரின் தாயார் தீயணைப்பு மற்றும் மீட்பு குழுவை தொடர்பு கொண்டதாக மோஹட் அபிஸ் கூறினார். அதனைத் தொடர்ந்து 60 பேர் கொண்ட மீட்பு குழுவினர் காணமல்போனவர்களை தேடும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.