கோலாலம்பூர், டிச 11 – ஆறு வயது ஆட்டிசம் சிறுவனான ஜெய்ன் ரய்யான் அப்துல் மாடின் கொலை தொடர்பில் விசாரணை நடத்திவரும் சிலாங்கூர் போலீசார் அவனது வீட்டிலிலுள்ள குடும்பத்தினரிடமிருந்து தடயயியல் மாதிரிகளை எடுத்துச் சென்றனர்.
தடயயியல் குழுவினரும் சாதாரண உடையணிந்த இதர மூன்று போலீஸ்காரர்களும் டமன்சர டமாய் இடமான் வீடமைப்பு பகுதியிலுள்ள அடுக்குமாடி குடியிருப்பு பகுதிக்கு நேற்று மாலை மணி 4.20 அளவிற்கு வருகை புரிந்ததாக கூறப்பட்டது.
போலீஸ் குழுவினர் அங்கு வருவதற்கு முன்னர் ஜெய்ன்பெற்றோர்கள், ஜைம் இக்வான் மற்றும் இஸ்மானிரா அப்துல் மனாஃப் ஆகியோரும் முன்கூட்டியே அவ்வீட்டில் காத்திருந்தனர். சுமார் 45 நிமிடங்கள் அந்த குடும்பத்தினரின் அடுக்குமாடி வீட்டிலிருந்து மூன்று போலீஸ்காரர்களும் அங்கிருந்து வெளியேறினர்.
அவர்களில் இருவர் சாக்லேட் நிறத்திலான நான்கு காகித பேக்குகளில் தடயயியல் மாதிரிகளையும் எஞ்சிய தடயயியல் மாதிரிகளை கருப்பு பெட்டி ஒன்றில் தடயயியல் குழுவினரும் எடுத்துச் சென்றனர். ஜெய்ன் குடும்பத்தினரின் இல்லத்திலிருந்து தடயயியல் மாதிரிகளை எடுத்துச் சென்றதை சிலாங்கூர் போலீஸ் தலைவர் ஹுசைன் ஓமார் கான் உறுதிப்படுத்தினார்.
எனினும், இது குறித்து மேல் விவரங்கள் எதனையும் அவர் தெரிவிக்கவில்லை. நேற்று மேலும் 28 பேரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டதாகவும் இதன் வழி இதுவரை மொத்தம் 48 பேரிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
கடந்த செவ்வாய்க்கிழமை மதியம் காணாமல்போனதாக அறிவிக்கப்பட்ட ஜெய்ன் மறுநாள் தமது வீட்டிலிருந்து 200 மீட்டர் தொலைவிலுள்ள நீரோடைக்கு அருகே இறந்த நிலையில் அவனது உடல் கண்டுப்பிடிக்கப்பட்டது. ஜெய்ன் கழுத்து நெறிக்கப்பட்டு கொல்லப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.