புத்ரா ஜெயா, மார்ச் 2 – முறையான ஆவணங்கள் இன்றி நாட்டில் தங்கியிருக்கும் வெளிநாடுகளைச் சேர்ந்த சுமார் 60,000 தொழிலாளர்கள் சட்ட நடவடிக்கை எதுவுமின்றி அபராதத்தை மட்டும் செலுத்திவிட்டு நாட்டிலிருந்து வெளியேறி தங்களது தாயகத்திற்கு திரும்பும் திட்டத்தை பயன்படுத்திக் கொள்ளும்படி உள்துறை அமைச்சர் சைபுதீன் நசுஷன் இஸ்மாயில் கேட்டுக்கொண்டுள்ளார். நேற்று மதியம் வரை தாயகம் திரும்பும் திட்டத்தில் பங்கேற்பதற்கு ஆவணத்தை கொண்டிருக்காத 848 பேர் பதிவு செய்து கொண்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
தாயகம் திரும்பும் நடவடிக்கைக்காக வெளிநாட்டினர் எந்தவொரு தரகர்களின் சேவையை நாடாமல் நேரடியாக குடிநுழைவு அலுவலகத்திற்கு வந்து தங்களது பெயரை பதிந்துகொள்ளும்படி சைபுதீன் கேட்டுக்கொண்டார். தாயகம் திரும்புவதற்கு எந்தவொரு தரகர்களின் சேவையை நாடவேண்டாம். இந்த விவகாரத்தில் மூன்றாம் தரப்பான தரகர்களின் சேவையை பயன்படுத்துவதை அரசாங்கம் விரும்பவில்லை. நாட்டில் நீண்ட காலம் தங்கியிருந்த வெளிநாட்டு தொழிலாளர்கள் அல்லது முறையான பெர்மிட் இல்லாதவர்கள் முக்கியமான துறைகளில் வேலை வாய்ப்பின் கீழ் வேலை செய்வதற்கு மற்றொரு திட்டம் உள்ளது. ஆனால் ஆவணங்கள் எதுவும் இல்லாத வெளிநாட்டு தொழிலாளர்கள் சுயமாக தங்களது தயாகத்திற்கு திரும்புவதற்கு அனுமதிக்கும் திட்டம் நேற்று முதல் இவ்வாண்டு டிசம்பர் 31ஆம் தேதிவரை அமலில் இருக்கும் என சைபுதீன் கூறினார்.