கோலாலம்பூர், பிப் 25 – ஒருவர் தானமாக வழங்கிய இருதயத்தை இன்று விடியற்காலையில் மலாக்காவிலிருந்து கோலாலம்பூருக்குக் கொண்டுச் சென்றதில் தீயணைப்பு மற்றும் மீட்புத்துறையின் ஹெலிகாப்டர் முக்கிய பங்காற்றியது. மலாக்கா மருத்துவமனை கேட்டுக்கொண்டதைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக தீயணைப்பு மற்றும் மீட்புத்துறை நடவடிக்கைக்கான தலைவர் கேப்டன் ரோஸ்லான் அசிஸ் தெரிவித்தார். மூளை செயல் இழந்த நோயாளி ஒருவரின் இருதயத்தை தானமாக மற்றவருக்கு வழங்குவதற்கு அவரது குடும்பத்தினர் அனுமதி வழங்கினார்.
இதனைத் தொடர்ந்து மூன்று மருத்துவ அதிகாரிகளுடன் இருதயத்தை கொண்டுச் சென்ற ஹெலிகாப்டர் இன்று காலை மணி 8:35 அளவில் கோலாலம்பூல் பொது மருத்துவமனை வளாகத்தில் தரையிறங்கியது. உடல் உறுப்பு மாற்று சிகிச்சைக்கான உறுப்புக்களை மருத்துவ குழுவினர் தெரிவித்த குறிப்பிட்ட நேரத்தில் கொண்டுச் செல்வதை உறுதிப்படுத்தினால்தான் அந்த உறுப்பு தானத்தை நன்கொடையாக பெற்றவருக்குப் பொருத்த முடியும் என்பதால் தீயணைப்பு மீட்புத்துறையின் ஹெலிகாப்டர் சேவை பயன்படுத்தப்பட்டதாக ரோஸ்லான் கூறினார்.