கோலாலம்பூர், டிச 12 – தம்மால் முடிந்த அளவுக்கு சிறந்த முறையில் சேவையாற்ற முயன்றதாக மனித வள அமைச்சர் பதவியிலிருந்து வெளியேற்றப்பட்ட வி.சிவக்குமார் தெரிவித்துள்ளார்.
அமைச்சரவையில் மீண்டும் வாய்ப்பு வழங்குவதில்லை என பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமின் முடிவை தாம் ஏற்றுக்கொள்வதோடு அதனை மதிப்பதாகவும் சிவக்குமார் கூறியுள்ளார்.
தாம் மனித வள அமைச்சராக இருந்த கடந்த ஒர் ஆண்டு காலத்தில் முடிந்த வரை சிறந்த சேவையை வழங்கியதாகவும் தமக்கு சிறந்த ஒத்துழைப்பு வழங்கிய அமைச்சின் அனைத்து பணியாளர்களுக்கும் நன்றி கூற கடமைப்பட்டிருப்பதாகவும் சிவக்குமார் கூறினார்.
வெளிநாட்டு தொழிலாளர்கள் விவகாரம் தொடர்பில் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எம்.ஏ.சி.சி, சிவக்குமாரை விசாரணைக்கு அழைத்ததைத் தொடர்ந்து அவர் பதவி விலக வேண்டுமென அல்லது விடுமுறையில் செல்ல வேண்டும் என சில தரப்பினர் கடந்த ஏப்ரல் மாதம் கோரிக்கை எழுப்பியபோதிலும் சிவக்குமார் அதனை நிராகரித்தார்.
வாக்குமூலம் அளிப்பதற்காக மட்டுமே சிவக்குமார் அழைக்கப்பட்டதால் அவர் விடுமுறையில் செல்ல வேண்டியதில்லை என அப்போது பிரதமர் அன்வார் இப்ராஹிம் கூறியிருந்தார்.
அன்வாரின் அமைச்சரவை மாற்றத்தில் மீண்டும் இடம்பெறாதவர் பத்து காஜா நாடாளுமன்ற உறுப்பினரான சிவக்குமார் மட்டுமே. நிதித்துறை துணையமைச்சராக இருந்த ஸ்டீவன் சிம் தற்போது மனித வள அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.