Latestமலேசியா

மனிதவள அமைச்சின் கீழ் உள்ள நிறுவனங்கள் மேலும் சிறப்பாக செயல்படுவதற்கு முன்னுரிமை வழங்கப்படும் – சிவக்குமார்

கோலாலம்பூர், டிச 11 – இவ்வாண்டு  பல்வேறு திட்டங்களை   வெற்றிகரமாக மேற்கொண்டதில் தாம் திருப்தி அடையும் அதே  வேளையில் எதிர்வரும்  2024 ஆம் ஆண்டு புத்தாண்டில் மேலும் சிறந்த முறையில்   செயல்படுவதற்கு  மனித வள அமைச்சு உறுதி பூண்டுள்ளதாக  அதன் அமைச்சர்  வி.சிவக்குமார் தெரிவித்தார்.  முக்கியமாக மனித வள அமைச்சின் கீழ் உள்ள   5 நிறுவனங்கள்  இவ்வாண்டு  மக்களுக்கான அதன் சேவையில் மிகவும் ஆக்கப்பூர்வமாக செயல்பட்டுள்ளன.  அடுத்த ஆண்டு நிறைய  செயல் திட்டங்களில் கவனம் செலுத்த  வேண்டியிருப்பதாக  இன்று   கோலாலம்பூரில் ஊடகவியலாளர்களுடன் நடைபெற்ற சந்திப்பின்போது வணக்கம் மலேசியாவிடம்    சிவக்குமார் தெரிவித்தார். 

புத்தாண்டில்   TVET தொழில் திறன் பயிற்சி  திட்டங்களில் கூடுதல் கவனம் செலுத்தப்படும்.   தொழில் திறன் பயிற்சி பெற்றவர்களுக்கு    95 முதல்  98 விழுக்காடுவரை வேலை வாய்ப்பு பிரகாசமாக இருப்பதால்   இந்த விவகாரத்தில் நாம் அதிக கவனம் செலுத்த வேண்டியிருப்பதாக அவர் கூறினார். 

அதிகமான வெளிநாட்டு தொழிலாளர்களை நாம் தொடர்ந்து நம்பியிருக்க முடியாது . அதனை குறைப்பதற்காக பல கட்டங்களைக் கொண்ட லெவி முறை அமல்படுத்தப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

இதனிடையே   Gig  எனப்படும்  சொந்த தொழில்  மூலம் வருமானத்தை ஈட்டக்கூடிய தரப்பினரின் நலன்களிலும் மனித வள அமைச்சு கவனம் செலுத்தும். குறிப்பாக மோட்டார் சைக்கிள்களில் சொந்தமாக உணவுகளை விநியோகிப்போர், கிரேப் வாடகை கார் ஓட்டுனர்கள், பொருட்களை விநியோகம் செய்வோர்  போன்ற தொழில்துறையில் ஈடுபட்டுள்ளவர்களின் நலன்களையும் நாம் கவனம் செலுத்த  வேண்டியிருக்கிறது. இத்தகைய  தொழில் துறைகளைச் சேர்ந்தவர்கள்  தங்களது முதலாளிகளால் ஏமாற்றப்படாமல் இருப்பதை தடுப்பதற்கான நடவடிக்கை குறித்தும் மனித வள அமைச்சு  தீவிர கவனம் செலுத்தும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக சிவக்குமார் கூறினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!