கோலாலம்பூர், பிப்ரவரி 6 – மருத்துவரின் ஆலோசனையை மீறி, தனது கணவரை மருத்துவமனைக்கு வெளியே அழைத்துச் சென்றதாக கூறப்படும் குற்றச்சாட்டை, முன்னாள் சரவாக் மாநில ஆளுனர் துன் அப்துல் தைப் முஹமட்டின் மனைவி நிராகரித்துள்ளார்.
போலீஸ் புகார் செய்யப்பட்டு, விசாரணைக்கு இட்டுச் சென்றுள்ள அந்த குற்றச்சாட்டை, தமது இஸ்டாகிராம் பதிவு வாயிலாக தோ புவான் ரகாத் குர்தி தைப் மறுத்துள்ளார்.
“அது உண்மையில்லை. இதோ ஆதாரம்” என தாதியின் குறிப்பு ஒன்றையும் இணைத்து ரகாட் பதிவிட்டுள்ளார்.
இம்மாதம் இரண்டாம் தேதி இடப்பட்டிருக்கும், கையால் எழுதப்பட்ட படிக்க கடினமான அந்த குறிப்பில், பெனடெட் டாமி எனும் தாதி ஒருவர் கையெழுத்திட்டுள்ளார்.
முன்னதாக, தைப் அனுமதிக்கப்பட்டிருந்த தனியார் மருத்துவமனையின் மருத்துவர் ஒருவர் செய்ததாக நம்பப்படும் போலீஸ் புகார் ஒன்று நேற்று வைரலானது.
அதனைத் தொடர்ந்து, அந்த போலீஸ் புகாரின் அடிப்படையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அப்துல் தைப், கூச்சிங், டெமாக் ஜெயாவிலுள்ள அவரது இல்லத்திற்கு, வலுக்கட்டாயமாக அழைத்துச் செல்லப்பட்டதாக, லண்டனை தளமாக கொண்ட செய்தி இணையத்தளம் ஒன்று தகவல் வெளியிட்டிருந்தது.
இந்நிலையில், தைப் நேற்று முன்தினம் நள்ளிரவு வாக்கில், மருத்துவமனையிலிருந்து அழைத்துச் செல்லப்பட்டது தொடர்பில், இரு புகார்கள் பெறப்பட்டுள்ளதை போலீசார் உறுதிப்படுத்தியுள்ளனர்.
அதனால், குற்றவியல் சட்டத்தின் 336-வது பிரிவின் கீழ், அலட்சியப் போக்கால் மற்றவர்களின் உயிருக்கு அல்லது பாதுகாப்புக்கு ஆபத்தை விளைவிக்கும் குற்றம் தொடர்பில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக, சரவாக் போலீஸ் ஆணையர் டத்தோ மஞ்சா அதா கூறியுள்ளார்.