குவாலா லங்காட், மார்ச் 13 – சிலாங்கூர், பந்திங், தெலுக் பங்லிமா காராங்கிலுள்ள, வீடொன்றில், பாராங் கத்திகளை ஏந்தி கொள்ளையிட்டு தப்பிச் சென்ற நான்கு ஆடவர்களை போலீசார் அடையாளம் கண்டு வருகின்றனர்.
நேற்று முன்தினம், ஞாயிற்றுக்கிழமை மாலை மணி 4.32 வாக்கில் நிகழ்ந்த அந்த கொள்ளையில், பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் ஆயிரம் ரிங்கிட் இழப்பை எதிர்நோக்கியுள்ளதாக கூறப்படுகிறது.
அந்த கொள்ளை தொடர்பில், அரசாங்க மருத்துவமனை ஒன்றில், மருத்துவ அதிகாரியாக பணிப்புரியும் 26 வயது பெண் ஒருவரிடமிருந்து புகார் பெறப்பட்டுள்ளதை, குவாலா லங்காட் போலீஸ் தலைவர் சுப்ரிடெண்டன் அஹ்மாட் ரிட்சுவான் முஹமட் நோர் சாலே உறுதிப்படுத்தினார்.
புரோடுவா அத்திவா ரக காரில், பாராங் கத்திகளுடன் வந்த நான்கு ஆடவர்கள், புகார் அளித்த பெண்ணின் பாட்டி நடத்தி வரும் மளிகை கடையில் புகுந்ததோடு, வீட்டிலும் கைவரிசையை காட்டி விட்டு கம்பி நீட்டியது விசாரணையில் தெரிய வந்துள்ளது.
எனினும், சம்பவத்தின் போது வீட்டிலிருந்த அப்பெண்ணின் தாயார் உரக்க கத்தி குரல் எழுப்பியதால், அந்நால்வரும் அங்கிருந்து தப்பிச் சென்றதாக கூறப்படுகிறது.
அச்சம்பவம் தொடர்பில், தகவல் அறிந்த பொதுமக்கள் போலீசாரை தொடர்புக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.