சென்னை , நவ 30 – கலைஞரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு உலகத் தமிழ் வம்சாவளி அமைப்பு உலகத் தமிழர்கள் முன்னிலையில் ‘ஐம்பெரும் விழாவாக’ ஜனவரி 6 மற்றும் 7ஆம் தேதிகளில் சென்னை தமிழ்நாடு திறந்த நிலை பல்கலைக்கழக வளாகத்தில் ஏற்பாடு செய்துள்ளது. முத்தமிழ் அறிஞருக்கு முத்தமிழால் வணக்கம்’ என போற்றும் வகையில் இயல், இசை, நாடகம் மற்றும் தமிழ் திரை துறைக்கு கலைஞர் செய்த நன்மைகளை எடுத்துக்காட்டும் விதமாக பல்வேறு நிகழ்சிகள் நடைபெறவிருக்கின்றன.
கலைஞரும் கதை வசனமும், கலைஞரும் பாடலாசிரியர்களும், கலைஞரும் இசையமைப்பாளர்களும், கலைஞரும் இயக்குனர்களும், கலைஞரும் திரைப்பட தயாரிப்பாளர்களும், கலைஞரும் திரையரங்கமும், கலைஞரும் திரை துறை பணியாளர்களும், கலைஞர் திரைத்துறைக்கு செய்த நன்மைகளையும் அதை சார்ந்து தமிழர்களின் முன்னேற்றமும், உலகத் தமிழர்களிடையே கொண்டு செல்லும் நோக்கத்தில் உலகத் தமிழ் வம்சாவளி அமைப்பு ‘கலைஞரும் சினிமாவும்’ என்ற நிகழ்வை நடத்த உள்ளது.
திரையுலக பிரமுகர்கள் பலர் கலந்துகொள்ளும் இந்நிகழ்வை உலகத் தமிழர்கள் கண்டுகளிக்கும் விதமாக நேரலை செய்யப்பட உள்ளது என நிகழ்ச்சி ஏற்பாட்டாளரும் உலகத் தமிழ் வம்சாவளி அமைப்பின் தலைவருமான செல்வகுமார் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தார். அதோடு இந்நிகழ்விற்கு பல்வேறு நாடுகளில் இருந்து தமிழ் சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாநில மத்திய அமைச்சர்கள், வெளிநாட்டில் உள்ள தமிழ் திரைக்கலைஞர்கள் கலந்துகொண்டு சிறப்பிக்க உள்ளனர். மேல் விவரங்களுக்கு +60166167708 என்ற எண்ணில் வாட்ஸ் அப் மூலம் தொடர்பு கொள்ளலாம்.