சுபாங் ஜெயா, மார்ச்-6, சிலாங்கூர், சுபாங் ஜெயாவில் சலவைக் கடையொன்றின் வாசலில் ஆண் குழந்தையொன்று கைவிடப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டது.
செவ்வாய்க் கிழமை அதிகாலை 5 மணிக்கு, USJ 8, சுபாங் பெர்டானா கூட்யர் கோர்ட் 4-கில், அக்குழந்தைக் குடியிருப்பாளர்களின் கண்ணில் பட்டது.
பிறந்து ஒரு மாதமே ஆனதாக நம்பப்படும் அக்குழந்தயை மீட்ட குடியிருப்பாளர்கள், உடனடியாக அதிகாரிகளுக்குத் தகவல் கொடுத்ததாக, சுபாங் ஜெயா சட்டமன்ற உறுப்பினர் மிஷல் இங் கூறினார்.
பெரியவர்கள் அணியும் சட்டை, ஒரு ஜோடி காலுறை, கையுறை மற்றும் தலையில் அணியும் scarf அடங்கிய பையுடன், அக்குழந்தை அங்கு கைவிடப்பட்டிருந்தது.
இவ்வேளையில், இது போன்று குழந்தைகள் கைவிடப்படும் சம்பவங்களைக் களைய அதிகாரத் தரப்பு மனிதாபிமான அடிப்படையிலான அணுகுமுறைகளைப் பின்பற்றலாம் என மிஷல் இங் ஆலோசணைக் கூறினார்.
“குழந்தை கைவிடப்பட்ட விதத்தைப் பார்க்கும் போது, அதன் பெற்றோர் கஷ்டப்படும் நிலையில் இருக்கலாம் என்பதை யூகிக்க முடிகிறது. எனவே இது போன்ற சூழ்நிலைக்குத் தள்ளப்படும் பெற்றோரை எடுத்த எடுப்பிலேயே குற்றவாளிகள் போல் பார்க்கக் கூடாது. மாறாக அவர்களுக்கு எந்த வகையில் ஆதரவளிக்கலாம், உதவிச் செய்யலாம் என்ற ரீதியில் யோசித்தால் நலம்” என்றார் அவர்.
அவ்வகையில், சலவைக் கடையில் மீட்கப்பட்ட அக்குழந்தையின் பெற்றோர் அல்லது பாதுகாவலருக்கு உரிய உதவி கிடைப்பதில் அதிகாரத் தரப்புடன் ஒத்துழைக்கத் தாமும் தயார் என மிஷல் மேலும் கூறினார்.