காசா முனை, டிசம்பர் 21 – பாலஸ்தீனத்தில், இஸ்ரேலிய இராணுவத்தின் அட்டூழியங்கள் தொடரும் வேளை; அங்கு தாக்குதல்களில் கொல்லப்பட்ட பாலஸ்தீனர்களின் எண்ணிக்கை இருபதாயிரத்தையும் தாண்டியுள்ளது.
தரைமட்டமான கட்டட இடிபாடுகளுக்கு இடையில், இன்னும் ஆயிரக்கணக்கான உடல்கள் கண்டுபிடிக்கப்படாமல், சிக்கி இருக்கலாம் என நம்பப்படுவதால், உண்மையான மரண எண்ணிக்கை இன்னும் பல மடங்காக அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.
மருத்துவமனைகளையும், பள்ளிக்கூடங்களையும், வீடுகளையும் குறி வைத்து இஸ்ரேல் மேற்கொள்ளும் தாக்குதல்களில் இதுவரை 52 ஆயிரத்துக்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர்.
இந்நிலையில், ஜபாலியா அகதிகள் முகாமில், 46 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதற்கு முன், அமல் அல் சலாம் சங்கத்தின் கட்டடத்தை குறி வைத்து மேற்கொள்ளப்பட்ட வான் தாக்குதலில், ஆயிரக்கணக்கானோர் காயமடைந்தனர்.
ஆகக் கடைசியாக, மேற்குகரைப் பகுதியிலுள்ள, அட்டில் நகரத்தை ஆக்கிரமித்த இஸ்ரேஸ் துருப்புகள், துல்கரேம் அகதிகள் முகாம் மீது தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது.