இந்தியா, ஜன 7 – சூரியனை ஆய்வு செய்ய இஸ்ரோ அனுப்பிய ஆதித்யா எல்-1 விண்கலம், நேற்று எல்-1 புள்ளியை வெற்றிகரமாகச் சென்றடைந்துள்ளது.
எல்-1 என்பது பூமிக்கும், சூரியனுக்கும் இடையிலான ஒரு குறிப்பிட்ட லாக்ரேஞ்ச் பாயிண்ட் (Lagrange Point) என்ற இடமாகும்.
எல்-1 எனும் அவவிடத்திலிருந்து எவ்வித குறிக்கீடும் இன்றி சூரியனை ஆய்வு செய்ய முடியும்.
இதுவரை , சூரியன் பற்றிய ஆராய்ச்சிக்கு அமெரிக்கா, ஐரோப்பிய கூட்டமைப்பு, சீனா மற்றும் ஜப்பான் போன்ற நாடுகள் மட்டுமே விண்கலங்களை அனுப்பியுள்ளன. அந்த வரிசையில் தற்போது இந்தியாவும் இடம் பிடித்துள்ளது.
இது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டுள்ள X பதிவில், “இந்தியா மற்றொரு புதிய மைல் கல்லை அடைந்துள்ளது.
சூரியனை ஆய்வு செய்யும் இந்தியாவின் முதல் விண்கலமான ஆதித்யா எல்-1 வெற்றிகரமாக அதன் இலக்கை அடைய, விஞ்ஞானிகளின் கடின உழைப்பே சான்றாகும்’ என்று புகழாரம் சூட்டி பதிவிட்டுள்ளார்.
மேலும், மனித குலத்தின் நலனுக்காக அறிவியலின் புது எல்லைகளை அடைவதற்கு நாம் தொடர்ந்து பணியாற்றுவோம் எனவும் கூறியுள்ளார்.