கோலாலம்பூர், பிப்ரவரி 28 – இவ்வாண்டு தொடங்கி 2030-ஆம் ஆண்டு வரையில், கட்டம் கட்டமாக செயல்படுத்தப்படவிருக்கும் வெங்காய சாகுப்படி திட்டம், நாட்டின் வெங்காய இறக்குமதியை 30 விழுக்காடு வரையில் குறைக்கும் என எதிர்ப்பார்க்கப்படுவதாக, விவசாயம், உணவு உத்தரவாத அமைச்சர் முஹமட் சாபு தெரிவித்தார்.
அத்திட்டம் இரு கட்டங்களாக செயல்படுத்தப்படும்.
இவ்வாண்டு தொடங்கி அடுத்தாண்டு வரையில் வர்த்தகத்துக்கு முந்தைய கட்டம் செயல்படுத்தபடவுள்ள வேளை ; 2026-ஆம் ஆண்டிலிருந்து 2030-ஆம் ஆண்டு வரையில் வணிக கட்டம் அமல்படுத்தப்படும்.
குறிப்பாக, வர்த்தகத்திற்கு முந்தைய கட்டத்தில், சின்ன வெங்காய சாகுப்படியில் கவனம் செலுத்தப்படும்.
அதற்காக, 70 மெட்ரிக் டன் சிறு வெங்காய விதைகளையும், 230 கிலோகிராம் சின்ன வெங்காய விதைகளையும் மார்டி எனும் மலேசிய விவசாய மேம்பாட்டு ஆய்வுக் கழகம் விநியோகிக்கும்.
அதோடு, வெங்காய நடவுக்காக 100 ஹெக்டர் நிலம் ஒதுக்கப்படும் வேளை ; ஆண்டொன்றுக்கு இரு முறை, ஹெக்டருக்கு ஐந்து டன் வரையில் அறுவடை செய்ய முடியும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
மக்களவை கேள்வி பதில் நேரத்தில் முஹமட் சாபு இவ்விவரங்களை வெளியிட்டார்.