கிரிக், மார்ச் 14 – சமூக ஊடகங்களில் வைரலான, மீன்களுக்கு வெடி வைக்கும் சம்பவம், பேராக், கிரிக், தெமெங்கோர் பாதுகாக்கப்பட்ட வனப் பகுதியிலுள்ள, கோலா சுங்கை மங்கா மற்றும் சுங்கை செங்கா நதிகள் சங்கமிக்கும் இடத்தில் நிகழ்ந்தது என்பதை போலீஸ் உறுதிப்படுத்தியுள்ளது.
ஹுலு பேராக்கில், வெடி பொருட்களைப் பயன்படுத்தியதாக சந்தேகிக்கப்படும் மீன்பிடி நடவடிக்கைகள் தொடர்பான காணொளி சமூக ஊடகங்களில் வைரலானதை தொடர்ந்து, மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், அந்த இடம் அடையாளம் காணப்பட்டதாக கிரிக் போலீஸ் தலைவர் சுப்ரிடெண்டன் ஜுல்கிப்ளி மாமுட் தெரிவித்தார்.
இம்மாதம் 11-ஆம் தேதி, மாலை மணி மூன்று வாக்கில், சமூக ஊடகங்களில் வைரலான அந்த இடத்தை, ஹுலுக் பேராக் மாவட்ட வனத் துறை அதிகாரிகளுடன் இணைந்து போலீசார் சோதனையிட்டதையும் ஜுல்கிப்ளி உறுதிப்படுத்தினார்.
அதனால், வனத்துறை அனுமதி இன்றி, பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிக்குள் நுழைந்து சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம் என அவர் பொதுமக்களுக்கு அறிவுறுத்தினார்.
அது 1984-ஆம் ஆண்டு வனச் சட்டம் மற்றும் 1992-ஆம் ஆண்டு மீன்பிடி சட்டங்களின் கீழ் குற்றமாகும்.
முன்னதாக, ஆடவர் கும்பல் ஒன்று, வெடி வைத்து மீன்களை பிடிக்கும் காணொளி ஒன்று வைரலானது குறிப்பிடத்தக்கது.