புதுடெல்லி, டிசம்பர் 14: France தலைநகரிலிருந்து 40 கீலோமீட்டரில் அமைந்துள்ள செர்ஜி நகரில், டே வொரெயால் தமிழ் கலாச்சார சங்க முன்னெடுப்பில் தமிழர்களின் கலாச்சார சின்னமாக கருதப்படும் திருவள்ளுவரின் உருவச்சிலை நிறுவப்பட்டுள்ளது.
பிரான்ஸின் தேசிய தினம் அன்று 7 அடியில், 600 கிலோகிராம் எடையில் திருக்குறளை ஏந்தியவாறு வெண்கல வள்ளுவர் சிலை அரசு அனுமதியுடன் மைய பூங்கா வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இச்சிலையை புதுச்சேரியை சேர்ந்த பத்மஸ்ரீ விருது பெற்ற சிற்பக் கலைஞர் முனுசாமி வடிவமைத்துள்ளார்.
சிலை திறப்பு விழாவில், புதுச்சேரி பொதுப்பணித் துறை அமைச்சர் லக்ஷ்மிநாராயணன் , இலங்கை கிழக்கு மாகாண கவர்னர் செந்தில் தொண்டைமான், தமிழ் கலாச்சார மன்ற தலைவர் இலங்கை வேந்தன் பாண்டுரங்கன், செர்ஜி நகர மேயர் ,பிரான்ஸ் நாட்டுக்கான இந்தியத் தூதரக அதிகாரிகள், தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழக அயலக தமிழ்கல்வி தலைவர் முனைவர் குறிஞ்சி வேந்தன் மற்றும் தமிழ் கலாச்சார மன்ற உறுப்பினர்கள் என பலரும் கலந்துக்கொண்டுள்ளனர்.
இதனிடையே வள்ளுவர் சிலை திறப்பு விழாவையொட்டி, பிரதமர் மோடி தனது மகிழ்ச்சியினை வெளிப்படுத்தும் விதமாக தனது x பக்கத்தில் பிரான்சில் உள்ள திருவள்ளுவர் சிலையின் புகைப்படத்துடன், இந்த சிலையானது நமது கலாச்சாரப் பிணைப்புகளுக்கு ஓர் அழகான சான்று என்று தமிழில் பதிவு செய்துள்ளார்.
தற்போது பல இடங்களிலிருந்து ஐரோப்பிய வாழ் இந்தியர்கள் குடும்பங்களாக வந்து செல்லும் சுற்றுலாத் தளமாக வள்ளுவர் சிலை அமையப்பெற்ற அவ்விடம் மாறியுள்ளது.
மேலும், இச்சிலையை சுற்றி மூப்பால் குறள்களை பிரான்ஸ் மொழியில் பதிவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
தற்போது உலகில் நிலவும் போர் சண்டைகளுக்கிடையே அன்றே வான்புகழ் வள்ளுவன் கூறிய ‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ எனபதற்கேற்ப மக்கள் அறநெறியில் நடக்க நினைவூட்டும் வகையில் இம்முன்னெடுப்பு அமைந்துள்ளதாக நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள் கருத்துரைத்தனர்.