வேலை செய்வதை தவிர்க்க முதலாளியின் பேரக்குழந்தைகளின் ‘ரெபினாவில்’ ‘டெட்டால்’ கலந்த பணிப் பெண்; 4 மாதச் சிறை
சிங்கப்பூர், நவம்பர் 16 – சிங்கப்பூரில், வேலை செய்வதை தவிர்க்க, முதலாளியின் பேரப்பிள்ளைகள் அருந்தும் “ரெபினா” பானத்தில், “டெட்டால்” கிருமி நாசினி திரவத்தை கலந்த இந்தோனேசிய பணிப்பெண் ஒருவருக்கு நான்கு மாதச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
ஆகஸ்ட்டு நான்காம் தேதி, வீட்டில் யாரும் இல்லாத நேரம் பார்த்து, முதலாளியின் பேரப் பிள்ளைகள் விரும்பி அருந்தும் ரெபினா பானத்தில், 18 வயது மிலா ரிண்டி அந்திகா எனும் அப்பெண் டெட்டால் திரவரத்தை கலந்துள்ளார்.
யாரும் கண்டுபிடிக்காமல் இருக்க, பின்னர் அலமாரியின் ஒரு மூளையில், அவர் அந்த டெட்டால் பான டப்பாவை மறைத்தும் வைத்துள்ளார்.
அதே நாள் மாலை, முதலாளியின் வீட்டிற்கு வந்த அவரது 32 வயது மகனும், 11 வயது பேரப் பையனும், 10 வயது பேரப் பிள்ளையும் அந்த பானத்தை குடித்துள்ளனர்.
அதில், பேரப் பிள்ளை மட்டும், இரசாயன நாற்றம் அடிப்பதாக, புகார் கூறியுள்ளார்.
அச்சம்பவத்தில் யாரும் பாதிக்கப்படவில்லை என்றாலும், சந்தேகம் எழுந்ததால், அந்த ரெபினா போத்தலை முதலாளி தனது அறையில் பத்திரப்படுத்தி வைத்ததாக கூறப்படுகிறது.
இம்மாதம் நான்காம் தேதி, அலமாரியில் டெட்டால் போத்தல் மறைத்து வைக்கப்பட்டிருந்ததை கண்ட முதலாளி, உடனடியாக அச்சம்பவம் தொடர்பில் போலீஸ் புகார் செய்ததால், மிலா கைது செய்யப்பட்டார்.
விசாரணையில், மனதளவில் கொடுமைகளை அனுபவித்து வந்ததாகவும், தமக்கு முறையாக உணவு வழங்கப்படவில்லை எனவும் மீலா குற்றச்சாட்டியுள்ளார்.
எனினும், மருத்துவ பரிசோதனையில் மிலா கூறியது பொய் என்பது உறுதிப்படுத்தப்பட்டதை அடுத்து, அவருக்கு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
அதே சமயம், சிங்கப்பூரில் 23 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மட்டுமே வேலை அனுமதி வழங்கப்படும். 18 வயது மிலாவுக்கு அனுமதி வழங்கப்பட்டது எப்படி என்ற கேள்வியும் எழுந்துள்ளது.