மலாக்கா, பிப்ரவரி 29 – மலாக்கா, தியோங் டுவாவில், இன்னும் கட்டி முடிக்கப்படாத, கட்டுமானத்தில் இருந்த தரை வீட்டில், மாநில குடிநுழைவுத் துறை அதிகாரிகள் மேற்கொண்ட சோதனையில், 232 சட்டவிரோத அந்நிய குடியேறிகள் கைதுச் செய்யப்பட்டனர்.
நேற்றிரவு தொடங்கி இன்று அதிகாலை மணி மூன்று வரை சுமார் நான்கு மணி நேரத்திற்கு அந்த அதிரடி சோதனை மேற்கொள்ளப்பட்டது.
அச்சோதனையின் போது, வங்காளதேசம், இந்தோனேசியா, பாகிஸ்தான், மியான்மார் ஆகிய நாடுகளை சேர்ந்த, 24 வயதுக்கும் 70 வயதுக்கும் இடைப்பட்ட அவர்கள் அனைவரும் கைதுச் செய்யப்பட்டனர்.
அச்சோதனையின் போது மொத்தம் 356 அந்நிய நாட்டவர்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்ட வேளை ; அவர்களில் 232 பேர் பல்வேறு குற்றங்கள் தொடர்பில் கைதுச் செய்யப்பட்டதை, மாநில குடிநுழைவுத் துறை இயக்குனர் அனிர்வான் பெளசி முஹமட் அய்னி உறுதிப்படுத்தினார்.
அதிகாரிகளின் வருகையை உணர்ந்த அவர்களில் சிலர் கால்வாய்களில் பதுங்கி இருந்ததும் தெரிய வந்துள்ளது.