ஜோகூர் பாரு, டிச 20 – போலி வேலை பெர்மிட்டுக்களை புதுப்பிக்கும் கும்பலை நடத்தியதன் மூலம் பெரிய அளவில் பணம் சம்பாதித்ததாக நம்பப்படும் வங்காளதேச ஆடவன் ஒருவனை ஜோகூர் குடிநுழைவுத்துறை அதிகாரிகள் கைது செய்தனர். தமது நடவடிக்கைகள் சட்டப்பூர்வமாக செயல்படுவது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தும் வகையில் அந்த 26 வயது நபர் நிறுவனம் ஒன்றையும் அமைத்துள்ளார். குடிநுழைவு விவகாரங்கள் தொடர்பான சேவையை வழங்கும் நிறுவனத்தை அமைத்த அந்த நபர் அதனை SSM எனப்படும் மலேசிய நிறுவனங்கள் ஆணையத்திடம் பதிவு செய்திருக்கிறார். குடிநுழைவுத் துறையினர் தம்போயில் மேற்கொண்ட நடவடிக்கையில் அந்த நபரும் அவனது இரண்டு தொழிலாளர்களும் கைது செய்யப்பட்டதாக ஜோகூர் குடிநுழைவுத் துறை இயக்குனர் பஹாருடின் தாஹிர் கூறினார்.
ஒவ்வொரு வேலை பெர்மிட் புதுப்பிக்கும் நடவடிக்கைக்கும் அந்த நபர் 6,500 ரிங்கிட் வசூலித்திருப்பதும் தெரியவந்துள்ளது. இவ்வாண்டு தொடக்கத்திலிருந்து போலி வேலை பெர்மிட் புதுப்பிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வந்திருப்பதும் தெரிய வந்திருப்பதாக அவர் கூறினார். மூன்று வங்காளதேச கடப்பிதழ்கள், இண்டு இந்னோனேசிய கடப்பிதழ்கள், கை தொலைபேசி ,கணினி போன்ற சாதனங்களும் பறிமுதல் செய்யப்பட்டதாக அவர் கூறினார்.