மலாக்கா, நவ 23 – பிரிட்டன் மக்களை இலக்காகக் கொண்டு செயல்பட்ட வேலை வாய்ப்பு மோசடிக் கும்பலை மலாக்கா போலீசார் முறியடித்தனர். பகுதி நேர வேலை வாய்ப்பு இருப்பதாக இணையத்தின் மூலம் செயல்பட்டு வந்த அந்த மோசடி கும்பலைச் சேர்ந்த 17 சந்தேகப் பேர்வழிகள் கைது செய்தனர். அயெர் கெரோவிலுள்ள பங்களாவை அழைப்பு மையமாக பயன்படுத்தி இக்கும்பல் செயல்பட்டதாக மலாக்கா போலீஸ் தலைவர் ஸைனோல் சமாஹ் தெரிவித்தார்.
அதிகாலை மணி 12.35 அளவில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின்போது அந்த அழைப்பு மையத்தின் கண்காணிப்பாளர் என நம்பப்படும் 35 வயது சந்தேகப்பேர்வழியும் கைது செய்யப்பட்டதாக அவர் கூறினார். கைது செய்யப்பட்டவர்களின் 13 ஆடவர்களும் ஒரு பெண்ணும் அடங்குவர் என ஸைனோல் சமாஹ் தெரிவித்தார். 19 கணிணிகள், 60 கை தொலைபேசிகள் மற்றும் 100,000 ரிங்கிட் மதிப்புள்ள இரண்டு வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் அவர் கூறினார்.