கொலம்பியா, நவம்பர் 16 – பதப்படுத்தப்பட்ட உணவு வகைகளை இலக்காகக் கொண்டு சுகாதார வரியை அறிமுகப்படுத்தியுள்ள, முதல் உலக நாடாக கொலம்பியா திகழ்கிறது.
லத்தின் அமெரிக்க நாடான கொலம்பியாவின் அந்த வெளிப்படையான வரி, இதர உலக நாடுகளுக்கு முன்மாதிரியாக இருக்குமென சுகாதார நிபுணர்கள் பாராட்டியுள்ளனர்.
பல ஆண்டு ஆய்வுகளுக்கு பின்னர், “ஜங் புட் சட்டம்” இம்மாதம் நடைமுறைக்கு வந்துள்ளது. அதனை தொடர்ந்து, கூடிய விரைவில், படிப்படியாக வரி விகிதம் அமலுக்கு வரவுள்ளது.
குறிப்பாக, அதிக சுகாதார பாதிப்புகளை ஏற்படுத்தும் உணவு வகைகளுக்கு உடனடியாக பத்து விழுக்காடு வரி விதிக்கப்படும். அடுத்தாண்டு அது 15 விழுக்காடாக அதிகரிக்கப்பட்டு பின்னர் 2025-ஆம் ஆண்டு 20 விழுக்காடாக உயர்த்தப்படும்.
உலக நாடுகள் பல, புகையிலை அல்லது சர்க்கரைப் பானங்களுக்கு வரி விதித்துள்ளதன் வாயிலாக, சுகாதார வரியை செயல்படுத்தியுள்ளன.
எனினும், அந்த வரியை பதப்படுத்தப்பட்ட உணவு வகைகளுக்கு விரிவுப்படுத்தியுள்ள முதல் நாடு எனும் பெருமையை கொலம்பியா பெற்றுள்ளது.