கோலாலம்பூர், டிச 7 – மலேசிய – இஸ்ரேல் நட்புறவுக்கு ஆதரவு தெரிவித்து அறிக்கை வெளியிட்ட ஆடவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதை புக்கிட் அமான் குற்றவியல் விசாரணைத் துறையின் இயக்குனர் டத்தோஸ்ரீ
முகமது சுஹைலி முகமட் ஜைன் தெரிவித்தார்.
மலேசியாவிற்கும் இஸ்ரேலுக்குமிடையே அரசதந்திர உறவுகள் ஏற்படுத்தப்பட வேண்டும் என்றும் ஹனன்யா நஃப்தலி என்ற அந்த ஆடவர் இஸ்ரேலில் உள்ள சமூக வலைத்தளத்திற்கு நேர்க்காணல் கொடுத்துள்ளார். அந்த ஆடவர் இன்று முதல் வெள்ளிக்கிழமை வரை மூன்று நாட்களுக்கு தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக முகமது சுஹைலி கூறினார்.
1948-ஆம் ஆண்டின் நிந்தனை சட்டத்தின் 4-ஆவது விதி உட்பிரிவு 1-இன் கீழ் மற்றும் 1998-ஆம்ஆண்டின் தொடர்பு பல்லூடக சட்டத்தின் 233-ஆவது விதியின் கீழ் குற்றவியல் துறையின் விசாரணைப் பிரிவு அந்த ஆடவரிடம் விசாரணை மேற்கொள்ளும் என முகமது சுஹைலி வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்திருக்கிறார். இந்த விவகாரம் இன்னும் விசாரணையில் இருப்பதால் இது குறித்து ஆருடங்கள் எதனையும் வெளியிட வேண்டாம் என அவர் கேட்டுக்கொண்டார்.