பேங்காக் , ஜன 30 – தாய்லாந்தில் சியாங் மாயில் உள்ள வனவிலங்கு அறக்கட்டளையில் கரடி கடித்ததால் சுவிட்சர்லாந்தை சேர்ந்த நபர் ஒருவர் தனது கையை சிறு கத்தியினால் வெட்டிக்கொண்டார். தன்னார்வத் தொண்டரான ஸ்டீபன் ஸ்பெகோக்னா வலது கையை கருப்பு கரடியின் கூண்டிற்குள் நீட்டி அந்த விலங்குக்கு உணவளித்தபோது, அது திடீரென அவரது கையை விட மறுத்ததாக தாய்லாந்து தகவல்கள் தெரிவிக்கின்றன. 32 வயதான ஸ்டீபன் தனது கையை விடுவிக்க முயன்று முடியாமல் போகவே வேறு வழியின்றி கையை அறுத்துக் கொண்டார்.
சியாங் டவ் மாவட்டத்தில் உள்ள வனவிலங்கு அறக்கட்டளைக்கு அருகாமையில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதற்கு முன், அவருக்கு முதலுதவி வழங்கப்பட்டது. அவரது முழங்கைக்கு கீழே சேதமடைந்ததாக பாங்காக் போஸ்ட் தெரிவித்துள்ளது. பின்னர் அறுவை சிகிச்சைக்காக சியாங் மாயில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு Stefan மாற்றப்பட்டார். அவரது கை துண்டிக்கப்பட்ட நிலையில் காணப்பட்டது. கரடியை காயப்படுத்துவதை விட தனது கையை தானே வெட்டிக்கொண்ட ஸ்டீபன் உண்மையிலேயே கனிவான இதயம் கொண்டவர் என்று உள்ளூர் மக்களை மேற்கோள் காட்டி பிரிட்டிஷ் பத்திரிகையான “The Sun” பாராட்டியது.