பத்து பஹாட், ஜன 20 – ஒரு மாதத்திற்கு முன்பு காணாமல் போனதாகக் கூறப்படும் பெல்லா (Bella) எனப்படும் தனித்து வாழும் தாயான மீரா ஷர்மிளா சம்சுசாவுக்கு சொந்தமானது என நம்பப்படும் பெண்ணின் எலும்புக்கூடுகளை போலீசார் கண்டுபிடித்துள்ளனர். இந்த விவகாரத்தில் முக்கிய சந்தேகப் பேர்வழியிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையை தொடர்ந்து எலும்புக் கூடுகள் காணப்பட்ட இடத்திற்கு நேற்று மதியம் 2 மணியளவில் அந்த நபர் போலீசாரை அழைத்துச் சென்றதாக ஜோகூர் போலீஸ் தலைவர் டத்தோ கமாருல் ஸமான் மாமட் தெரிவித்தார். முழுமையற்ற மனித எலும்புக்கூடு மற்றும் சில ஆடைகள் அப்பகுதியில் சிதறிக்கிடப்பதை நாங்கள் கண்டோம். எனினும் காணாமல்போன பெல்லாவின் எலும்புக் கூடுகள் அவையா என்பது உறுதிப்படுத்த வேண்டியுள்ளது. இது தொடர்பாக நாங்கள் மரபணு பரிசோதனை வரை காத்திருக்க வேண்டும் என்பதோடு பல் மருத்துவ ஆவணங்களும் பயன்படுத்தப்படும் என கமாருல் ஸமான் கூறினார்.
இரண்டு குழந்தைகளின் தாயான பெல்லா டிசம்பர் 14ஆம் தேதி முதல் காணவில்லை என அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து அவரது குடும்ப உறுப்பினர்கள் இரண்டு புகார்களை செய்துள்ளனர். இரவு மணி 11.50 அளவில் தனது காதலனின் காரில் பெல்லா இருந்ததாகவும், அருகில் உள்ள சலவைக் கடைக்குச் செல்வதற்காக அவர் பாத்தேக் ஆடை அணிந்திருந்ததாகவும் கூறப்படுகிறது. பெல்லாவின் காதலன் என நம்பப்படும் 24 வயது இளைஞன் உட்பட மூன்று சந்தேக பேர்வழிகள் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர்.