கோலாலம்பூர், டிச 28 – பினாங்கு ஜார்ஜ் டவுன், ஜாலான் புர்மாவில் உள்ள வர்த்தக வளாகத்தில் லிப்ட் தொழில்நுட்பாளர் R . தினேஷ் குமார் வேலை செய்து கொண்டிருந்தபோது அதன் கதவுகளுக்கிடையே அவரது தலை சிக்கிக்கொண்டதில் அவர் மரணம் அடைந்தார். எனினும் இந்த சம்பவத்தில் தினேஷ்குமாருடன் வேலை செய்த மற்றொரு 53 வயதுடைய தொழிலாளர் காயம் எதுவுமின்றி உயிர் தப்பிதாக பெர்னாமா தகவல் வெளியிட்டது. இந்த துயரச் சம்பவம் நேற்று மாலை மணி 4.54 அளவில் நிகழ்ந்தது.
தகவல் கிடைக்கப்பெற்று சம்பவம் நிகழ்ந்த இடத்திற்கு சென்றடைந்தபோது லிப்ட் பராமரிப்பு பணியாளர்கள் இருவர் லிப்ட்டில் சிக்கிக்கொண்டதை கண்டதாக பினாங்கு தீ மற்றும் மீட்புத்துறையின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார். லிப்ட்டின் இரண்டு கதவுகளுக்கிடையே 28 வயதுடைய தினேஷ் குமாரின் தலை சிக்கிக்கொண்ட நிலையில் சுயநினைவற்ற நிலையில் இருந்ததாகவும் அவர் பின்னர் இறந்துவிட்டதாக அந்த பேச்சாளர் கூறினார். தினேஷ்குமாரின் உடல் சவ பரிசோதனைக்காக பினாங்கு மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லப்பட்டது.