கிள்ளான், பிப் 14 – சிலாங்கூர், காப்பார் கம்போங் தோக் மூடாவிலுள்ள செம்பனை தோட்டத்தில் நேற்று மாடல் BK 160 இலகு ரக கேப்ரியல் விமானம் விபத்துக்குள்ளானதைத் தொடர்ந்து மரணம் அடைந்த விமானி டேனியல் யீ சியாங் கூன் மற்றும் துணை விமானி ரோஷன் சிங் ரெய்னா ஆகியோரின் உடல்களில் மேற்கொள்ளப்படும் உடற்கூறு பரிசோதனை இன்று முழுமையடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. அவர்களது குடும்ப உறுப்பினர்கள் மரபணு பரிசோதனைக்கான மாதிரிகளை இன்று காலையில் கிள்ளான் தேங்கு அம்புவான் ரஹிமா மருத்துவமனையில் வழங்கியிருப்பதாக சிலாங்கூர் போலீஸ் தலைவர் டத்தோ ஹுசைன் ஒமர் கான் தெரிவித்தார். உடற்கூறு பரிசோதனை இன்று முடிவுற்ற பின் டேனியல் மற்றும் ரோஷன் சிங் ஆகியோரின் உடல்கள் அவர்களது குடும்ப உறுப்பினர்களிடம் ஒப்படைக்கப்படும்.
இதனிடையே விபத்துக்குள்ளான விமானத்தின் விமானிகள் அறையிலேயே விமானி டேனியல் மற்றும் துணை விமானி ரோஷன் சிங் உடல்கள் கண்டுப்பிடிக்கப்பட்டன. நேற்று பிற்பகல் மணி 1.50 அளவில் அந்த இலகு ரக விமானம் விபத்திற்குள்ளான ஆறு மணி நேரத்திற்குப் பிறகு இரவு 8 மணியளவில் அவர்களது உடல்கள் மீட்கப்பட்டது. அவர்களது உடல்களின் அவயங்கள் விமானத்தின் உடைந்த பகுதியில் காணப்பட்டதை தொடர்ந்து பூமிக்குள் புதையுண்ட விமானத்திற்குள் அவர்களது உடல்கள் இருக்கும் என தெரியவந்ததால் மீட்கும் நடவடிக்கையில் முழுமையாக கவனம் செலுத்தப்பட்டதாக தீயணைப்பு அதிகாரி தெரிவித்தார்