கோலாலம்பூர், பிப் 21 -சரவாக்கில் நீண்ட காலம் முதலமைச்சராக இருந்தவரான துன் அப்துல் தாய்ப் முகமட் இன்று அதிகாலையில் காலமானதை தொடர்ந்து மலேசியா குறிப்பாக சரவா மதிப்பிற்குரிய தலைவரை இழந்துவிட்டதாக பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்திருக்கிறார். சரவாவின் நவீன தந்தை என வர்ணிக்கப்படும் துன் Taib மறைவினால் துயரில் உள்ள அவரது குடும்பத்திற்கும் சரவா மக்களுக்கும் Madani அரசாங்கத்தின் சார்பில் தமது ஆழ்ந்த அனுதாபத்தையும் அன்வார் தெரிவித்துக் கொண்டார். நாங்களும் சரவா மக்களும் மரியாதைக்குரிய உண்மையான தலைவரை இழந்துவிட்டோம் என தமது X ஸில் அன்வார் பதிவிட்டுள்ளார். நாட்டிற்கும் சரவா மக்களுக்கும் Taib ஆற்றிய சேவையும் அர்ப்பணிப்பும் என்றும் நினைவில் இருக்கும் என அவர் தெரிவித்தார்.
மலேசியாவில் நீண்ட காலம் சேவையாற்றிய மாநில அரசாங்கத்தின் தலைவராக Taib விளங்கினார். 1981ஆம் ஆண்டு முதல் 2014 ஆம் ஆண்டுவரை 33 ஆண்டு காலம் சரவா முதலமைச்சராக அவர் இருந்துள்ளார். மேலும் 1970ஆம் ஆண்டு முதல் 2008ஆம் ஆண்டுவரை 38 ஆண்டு காலம் Kota Samarahan தொகுதியில் நீண்ட காலம் சேவையாற்றிய நாட்டின் இரண்டாவது நாடாளுமன்ற உறுப்பினர் என்ற பெருமையையும் அவர் பெற்றுள்ளார். 2014ஆம் ஆண்டிலிருந்து கடந்த மாதம் இறுதிவரை சரவா ஆளுநராகவும் அவர் சேவையாற்றியுள்ளார்.