ஜோர்ஜ் டவுன், பிப் 14 – தனது தாயாரை பிணையாக பிடித்து வைத்துக்கொண்டு அடுக்குமாடி வீட்டை தகர்க்கப்போவதாக மிரட்டிய 40 வயதுடைய மகனை போலீசார் கைது செய்தனர். நேற்றிரவு மணி 10.57 அளவில் இச்சம்பவம் குறித்து புகார் கிடைக்கப் பெற்றதைத் தொடர்ந்து அந்த வீட்டிற்கு மீட்புக் குழுவினர் அனுப்பிவைக்கப்பட்டனர். தனது 65 வயது தாயாரை மிரட்டிய நபர் மிகவும் முரட்டுத்தனமாக செயல்பட்டதோடு அவ்வீட்டிலுள்ள இரண்டு திரவமய பெட்ரோலிய எரிவாயு தோம்புகளுக்கு தீவைத்து தற்கொலை செய்து கொள்ளப்போவதாகவும் அந்நபர் மிரட்டியதாக தீ மற்றும் மீட்பு நிலையத்தின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
வீட்டிற்கு தீ வைக்கப்பட்டால் அதனை அணைப்பதற்கான சிறப்புக் கருவிக்கான முன்னெச்சரிக்கைக்கு தயாராகும்படியும் தீயணைப்பு வீரர்கள் கேட்டுக்கொள்ளப்பட்டிருந்தனர். இறுதியில் அதிகாலை மணி 2.46அளவில் தனது தாயரை விடுவித்ததை தொடர்ந்து அந்நபரை போலீசார் கைது செய்தனர்.