கோலாலம்பூர், டிச 31 – 2020 ஆம் ஆண்டு முதல் 2022 ஆம் ஆண்டுவரை கூட்டரசு அரசாங்கத்தின் விளம்பரப் பிரச்சாரங்களுக்காக 700 மில்லியன் ரிங்கிட் பொது நிதியை தவறாகப் பயன்படுத்தியிருக்கலாம் என அம்னோ தொடர்பு இயக்குனர் லோக்மன் நூர் ஆடாம் செய்துள்ள புகார் தொடர்பில் போலீசார் விசாரணை நடத்தவுள்ளனர். இது தொடர்பாக நேற்று மதியம் 2 மணியளவில் தமது அதிகாரி செதாபாக் போலீஸ் நிலையத்தில் புகார் செய்துள்ளதாக லோக்மன் கூறியதாக பெர்னாமா தகவல் வெளியிட்டுள்ளது. 700 மில்லியன் ரிங்கிட் எவ்வாறு செலவிடப்பட்டது என்பதை மக்களாகிய நாங்கம் அறிய விரும்புகிறோம். இதற்கு முன்னர் இருந்த பிரதமர்களின் ஊழியர்கள் சம்பந்தப்பட்ட அதிகார துஷ்பிரயோகம் இருப்பதாக சந்தேகிக்கப்படும் ஆதாரங்கள் எங்களிடம் உள்ளன என லோக்மன் கூறினார்.
இந்த விவகாரத்தை போலீஸ் துறை மட்டுமின்றி மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமும் விசாரணை நடத்த வேண்டும் என நாங்கள் விரும்புகிறோம் என்று அவர் கூறினார். இது தொடர்பாக போலிசில் புகார் செய்யப்பட்டுள்ளதை வங்சா மாஜு மாவட்ட போலீஸ் தலைவர் அஷாரி அபு ஸமாஹ் உறுதிப்படுத்தினார். நாங்கள் விசாரணை நடத்துவோம், விளக்கம் பெறுவதற்கு நிதியமைச்சை தொடர்புகொள்வதும் அடங்கும் என அவர் கூறினார். 700 மில்லியன் ரிங்கிட் செலவினத்தை பிரதமர் அன்வார் இப்ராஹிம் நவம்பர் 7 ஆம் தேதியன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.