புதுடெல்லு, மார்ச் 26 – இந்தியா, உத்தரபிரதேச மாநிலத்தில், தந்தை மீது கொண்ட கடுங் கோபத்தால், அவரை கொல்ல மூன்று “அடி ஆட்களை” வேலைக்கு அமர்த்தியதை ஒப்புக் கொண்ட 16 வயது பதின்ம வயது இளைஞன் ஒருவன், கைதுச் செய்யப்பட்டுள்ளான்.
கடந்த வியாழக்கிழமை, 50 வயது முஹமட் நயீம் எனும் தொழிலதிபர் ஒருவர், மோட்டார் சைக்கிளில் வந்த மூன்று ஆடவர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
அச்சம்பவத்தை அடுத்து, கடந்த சனிக்கிழமை அம்மூவரும் கைதுச் செய்யப்பட்டனர்.
அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், பின்னணியில் செயல்பட்டது, தொழிலதிபரின் மகன் தான் என்பது தெரிய வந்தது.
அதன் பின்னர், அந்த இளைஞன் கைதுச் செய்யப்பட்டு விசாரிக்கபட்ட போது, கை செலவுக்கு போதுமான பணம் தர மறுத்த தந்தை மீது கொண்ட கடுங் கோபத்தால், அடி ஆட்களை வைத்து அவன் தனது சொந்த தந்தையை கொலை செய்தது தெரிய வந்தது.
அதற்காக, அந்த அடி ஆட்களுக்கு ஆறு லட்சம் ரூபாய் அல்லது சுமார் 34 ஆயிரம் ரிங்கிட்டை தருவதாக அவர் உறுதி அளித்திருந்த வேளை ; அதில் ஒன்றரை லட்சம் ரூபாய் அல்லது சுமார் எட்டாயிரத்து 500 ரிங்கிட்டை முன் பணமாக செலுத்தியதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
வீட்டிலும், தந்தையின் கடையிலும் சிறு சிறு திருட்டுகளில் ஈடுபட்டு வந்த அவன் இறுதியில் தந்தையை கொல்ல துணிந்ததாக கூறப்படுகிறது.
அந்த பதின்ம வயது இளைஞனுக்கு எதிராக விசாரணை தொடரும் வேளை ; சிறார் சீர்திருத்த பள்ளியில் அவன் வைக்கப்பட்டுள்ளான்.