கோலாலம்பூர், ஜன 11 – ஜோகூர் மற்றும் பஹாங்கில் வெள்ளத்தினால் வெளியேற்றப்பட்டவர்களின் எண்ணிக்கை 9,000 த்திற்கும் மேலாக அதிகரித்துள்ளது. அவ்விரு மாநிலங்களிலும் உள்ள 76 தற்காலிக நிவாரண நடவடிக்கைகளில் 9,146 பேர் தங்கியுள்ளதாக தேசிய பேரிடர் நிர்வாக மையமான Nadma தெரிவித்துள்ளது. ஜொகூரில் வெள்ளத்தினால் மோசமாக பாதிக்கப்பட் கோத்தா திங்கி மாவட்டத்தில் உள்ள 26 நிவாரண மையங்களில் 4,448 பேர் இருந்து வருகின்றனர். ஜோகூர் பாருவிலுள்ள 12 நிவாரண மையங்களில் 1,710 பேரும், குளுவாங்கில் உள்ள 9 நிவாரண மையங்களில் 1,163 பேரும் தங்கியுள்ளனர்.
ஜோகூரில் குளுவாங், சுங்கை எண்டாவ், மெர்சிங்கில் சுங்கை ஜெமாலுவாங் மற்றும் கோத்தா திங்கியில் சுங்கை ஜோகூர் ஆகிய மூன்று ஆறுகளிலும் நீர்மட்டம் இன்னமும் அபாயக் கட்டத்தில் இருப்பதாக அறிவிக்கப்பட்டது. பகாங்கில் பெக்கான், ரோம்பின் மற்றும் மாரான் ஆகிய மாவட்டங்களிலுள்ள 23 நிவாரண மையங்களில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட 1,610 பேர் தங்கியுள்ளனர்.