கோலாலம்பூர், மார்ச் 11 – உலகின் ஐந்தாவது மிக மகிழ்ச்சியான நாடாக மலேசியா பட்டியலிடப்பட்டுள்ளது.
71 நாடுகளைச் சேர்ந்த 4 லட்சம் பேரிடம் Sapien Labs என்ற இலாப நோக்கற்ற நரம்பியல் ஆராய்ச்சி நிறுவனம் நடத்தியக் கருத்துக்கணிப்பில் அது தெரிய வந்துள்ளது.
‘உலகின் மன நிலை’ என்ற தலைப்பிலான அந்த ஆய்வில் பங்கேற்றவர்களின் மன ஆரோக்கியம் பல்வேறு அம்சங்களில் மதிப்பிடப்பட்டு, அவர்களின் மதிப்பெண்களின் அடிப்படையில் ‘வளர்ச்சியடைந்தவர்கள்’ தொடங்கி ‘துன்பமடைந்தவர்கள்’ வரை வகைப்படுத்தப்பட்டுள்ளது.
அந்த MHQ மனநலக் குறியீட்டில் மலேசியா 85% மதிப்பெண்களைப் பெற்றுள்ளது; 2022-டைக் காட்டிலும் இது 2.9% அதிகமாகும்.
அப்பட்டியலில் மிகவும் மகிழ்ச்சியான நாடாக டோமினிக் குடியரசு முதல் இடத்தைப் பிடித்த வேளை, இலங்கை இரண்டாவது இடத்தைப் பிடித்து ஆச்சிரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
மூன்றாவது இடம் ஆப்ரிக்க நாடான தன்சானியாவுக்கும் நான்காவது இடம் பனாமாவுக்கும் கிடைத்துள்ளது.
இவ்வேளையில் மிகவும் மகிழ்ச்சியற்ற நாடுகள் வரிசையில் உஸ்பெகிஸ்தான் முதலாவதாக வந்துள்ளது.
இரண்டாவதாக பிரிட்டனும், மூன்றாவது நான்காவது இடங்களை முறையே தென் ஆப்ரிக்காவும் பிரேசிலும் பிடித்துள்ளன. தஜிகிஸ்தான் ஜந்தாவது இடத்தைப் பிடித்துள்ளது.
மக்களின் மனநல ஆரோக்கியம், கோவிட் பெருந்தொற்றுக்கு முந்தைய நிலையை நோக்கி நகர்வதற்கான எந்த அறிகுறியும் இல்லை என்பதையும் அந்த ஆய்வு கண்டறிந்துள்ளது.
“ பெருந்தொற்றின் நீடித்த தாக்கம், அதனால் மாறிய நமது வாழ்க்கை முறை, வேலை செய்யும் விதம், தொலைதூர வேலை, Online தொடர்பு, பதப்படுத்தப்பட்ட உணவுகளை அதிகம் உட்கொள்ளுதல் போன்ற அம்சங்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து, மக்களின் மனநல ஆரோக்கியத்தைப் பாதாளத்திற்குத் தள்ளிவிட்டது” என அவ்வறிக்கை மேலும் தெரிவிக்கிறது.
பட்டியலைப் பார்க்கும் போது, அதிக செல்வமும் பொருளாதார வளர்ச்சியும் அதிக மனநலத்திற்கு வழிவகுக்காது என்பது தெளிவாகத் தெரிவதாக ஆய்வு நிறுவனம் கூறியது.