புத்ரா ஜெயா, மார்ச் 21 – சில மூலப் பொருட்களின் விலைகள் குறைந்துவிட்ட போதிலும் உணவுப் பொருட்கள் இன்னமும் அதிகமான விலைக்கு விற்பனை செய்துவரும் வர்த்தகர்கள் குறித்து பொதுமக்கள் அதிருப்தி அடைந்துள்ளதால் விலையேற்றத்தை கண்கணிக்கும்படி அமலாக்க நிறுவனங்களுக்கு பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் வலியுறுத்தியுள்ளார். உணவுப் பொருட்களின் விலை அதிகமாக இருப்பதை நான் மறுக்கவில்லை, விலைகள் அதிகமாக இருப்பது குறித்து எனது நண்பர்கூட என்னிடம் கருத்துரைத்துள்ளார். அரிசி விலை குறைந்துவிட்டது. சீனியின் விலை கட்டுப்பாட்டில் உள்ளது. கோழி விலையும் குறைந்துள்ளது. இரண்டு அல்லாது மூன்று ஆண்டுகளுக்கு முன் ஒப்பிடுகையில் இப்போது உணவுப் பொருட்களின் விலைகள் அதிகரித்துள்ளதாக அன்வார் தெரிவித்தார்.
எனவே உணவுப் பொருட்களின் விலைகளை கண்காணிப்பது மற்றும் அமலாக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்ட வேண்டும் . விலையேற்றம் குறித்த ஆய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதோடு மாற்றம் தேவையென இன்று காலையில் நிதியமைச்சின் பணியாளர்களிடையே உரையாற்றியபோது நிதியமைச்சருமான அன்வார் கூறினார். இதனிடையே இதர தென்கிழக்காசிய நாடுகளை ஒப்பிடுகையில் மலேசியாவில்தான் அரிசி மற்றும் சீனி விலை குறைவாக இருப்பதாக அன்வார் கூறினார். இதுவே கடத்தல் போன்ற இதர பிரச்னைகள் ஏற்படுவதற்கும் காரணமாக இருப்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.