கோலாலம்பூர், டிச 8 – ஐ.நாவின் அங்கீகாரமின்றி பாலஸ்தீனத்திற்கு அமைதி காக்கும் படையை அரசாங்கம் அனுப்ப முடியாது என தற்காப்பு அமைச்சர் முகமது ஹசான் மேலவையில் தெரிவித்தார்.
தொகுதி சேரா இயக்கம் மற்றும் ஐ.நாவின் உறுப்பு நாடு என்ற முறையில் இந்த விவகாரத்தில் மலேசியா ஒருதலைப்பட்சமாக செயல்பட முடியாது. ஐ.நாவின் முடிவுக்காக மலேசியா காத்திருக்க வேண்டும் என அவர் கூறினார்.
பாலஸ்தீனத்திற்கு அமைதி காக்கும் பணிக்காக ஏன் நமது ராணுவ வீரர்களை அனுப்பவில்லையென பலர் வாட்ஸ்அப் குறுந்தகவல் மற்றும் சமூக வலைத்தளங்களில் வினவுகின்றனர்.
ஒருதலைப்பட்சமாக நமது படைகளை நாட்டின் எல்லைக்கு வெளியே நாம் அனுப்பிவைக்க முடியாது. நமது எல்லையிலிருந்து நமது படைகள் வெளியேறினால் சம்பந்தப்பட்ட நாட்டிற்கு எதிராக போர் பிரகடனமாகிவிடும். நாம் அந்த நிலையில் இல்லையென முகமது ஹசான் விளக்கம் அளித்தார்.