கோலாலம்பூர், நவம்பர் 29 – அண்மையில், புதிதாக சில நாடுகளுக்கு அரசாங்கம் விசா விலக்கை அறிவித்திருந்தாலும், அதனால் நாட்டின் பாதுகாப்பு அம்சம் ஒருபோதும் புறக்கணிக்கப்படவில்லை என பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.
அந்த விசா விலக்கு நாட்டின் பாதுகாப்பை பாதிக்காமல் இருப்பதை உறுதிச் செய்ய, கண்காணிப்பு – சோதனை நடவடிக்கைகளை பலம்படுத்துமாறு சம்பந்தப்பட்ட தரப்புக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக, பிரதமர் சொன்னார்.
டிசம்பர் முதலாம் தேதி தொடங்கி நாட்டிற்கு வருகை புரியும் இந்திய மற்றும் சீன சுற்றுப் பயணிகளுக்கு, 30 நாட்கள் விசா விலக்கை அண்மையில் அரசாங்கம் அறிவித்தது.
தற்சமயம், வளைகுடா மற்றும் சில மேற்காசிய நாடுகள் அனுபவித்து வரும் விசா விலக்கு சீனா மற்றும் இந்திய சுற்றுப்பயணிகளுக்கு விரிவுப்படுத்தப்படுவதாக பிரதமர் அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.