கோலாலம்பூர், டிச 7: நவம்பர் 1-ஆம் தேதி முதல் கோழி இறைச்சியின் விலை சந்தை தேவைக்கு ஏற்ப மிதப்பு நிலையில் விடப்பட்டப் பிறகு தற்போது ஒரு கிலோகிராம் RM8.08 ரிங்கிட் முதல் RM8.80 ரிங்கிட் வரை விற்பனையாகின்றது என்று உள்நாட்டு வாணிபம் மற்றும் வாழ்க்கைச் செலவினத் துணை அமைச்சர் ஃபுஸியா சால்லெ தெரிவித்துள்ளார்.
முன்னர் அரசாங்கம் RM9.40 ரிங்கிட்டாக நிர்ணயம் செய்திருந்த கட்டுபாட்டு விலையை விட மிகவும் மலிவாக சந்தையில் தற்போது கோழியின் இருப்பதாக அவர் சுட்டிக்காட்டினார்.
சந்தையில் அதீத லாபம் ஈட்டும் கூறு எதுவும் இல்லை எனவும் அப்படி ஏதும் நடந்தால் அதனை தடுக்க சட்டங்களின் அடிப்படையில் அரசாங்கத்திற்கு பல்வேறு அதிகாரங்கள் உள்ளதாகவும் அவர் மக்களவையில் குறிப்பிட்டார்.
நிலையான விநியோகம், உணவுப் பாதுகாப்பிற்கு உத்தரவாதம் அளிப்பதற்கும், தடையற்ற சந்தைப் பொருளாதார அமைப்பில் மீட்சியை விரைவுபடுத்துவதற்காகவும் அரசாங்கம் கோழியின் விலை கட்டுப்பாட்டை அகற்றியதாக அவர் தெரிவித்தார்.
அரசாங்கத்தின் விலை கட்டுப்பாடுகள் இல்லாத பட்சத்தில் சந்தையில் கோழியின் விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டே இருப்பதைத் தவிர்க்க உள்நாட்டு வாணிபம் மற்றும் வாழ்க்கைச் செலவினத் துறை மேற்கொள்ளும் நடவடிக்கைகள் குறித்து டத்தோஜு ஹானிஸ் அப்துல் அஸிஸ் எழுப்பிய கேள்விக்கு ஃபுஸியா இவ்வாறு பதிலளித்தார்.
உள்ளூர் சந்தையில் கோழியின் விலை உயரும் பட்சத்தில், வெளிநாடுகளில் கோழி விலை மலிவாக இருந்தால் இறக்குமதியாளர்கள் வெளிநாட்டிலிருந்து கோழியை இறக்குமதி செய்யலாம் என்றும் கூறினார்.