கோலாலம்பூர், நவ 18 – பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையிலான ஒற்றுமை அரசாங்கத்தை ம.இ.கா ஆதரிப்பதால் இந்திய சமுதாயத்தை பாதிக்கக்கூடிய பிரச்சனைகளை ம.இ.கா பார்த்துக் கொண்டு மௌனமாக இருக்காது என ம.இ.காவின் தேசிய தலைவரான டான்ஸ்ரீ SA விக்னேஸ்வரன் தெரிவித்தார். ம.இ.கா அரசாங்கத்தில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் இந்திய சமூகத்திற்காக குரல் கொடுப்பதற்கு எந்த காலத்திலும் தயங்கியதில்லையென ம.இகாவின் 77 ஆவது பேராளர் மாநாட்டின்போது நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் பேசியபோது விக்னேஸ்வரன் இத்தகவலை வெளியிட்டார்.
மாட்சிமை தங்கிய பேரரசர் ஒற்றுமை அரசாங்கத்திற்கு ஆதரவு அளிக்கும்படி அறைகூவல் விடுத்தார். அவரது கோரிக்கையை நாங்கள் ஏற்றுக்கொண்டதோடு, நாட்டின் அரசியல் நிலைத்தன்மை , பொருளாதார சூழ்நிலை மற்றும் மக்களின் சிரமங்களை எல்லாம் கருத்திற்கொண்டு ஒற்றுமை அரசாங்கத்திற்கு ம.இ.கா ஆதரவு தெரிவித்தாக அவர் கூறினார்.
இன்றைய ஒற்றுமை அரசாங்கத்தில் பணியாற்றுவதற்கு வாய்ப்பு வழங்கப்பட்டால் அந்த வாய்ப்பை ஏற்றுக்கொண்டு ம.இ.கா பணியாற்றும். அப்படி இல்லாவிட்டாலும் இந்திய சமூதாயத்தின் நலன்கள் மற்றும் உரிமைக்காக தொடர்ந்து பாடுபடும். எங்களுக்கு பதவி கொடுங்கள் என்ற நாங்கள் எவரிடமும் கெஞ்ச மாட்டோம். கொடுத்தால் மிகவும் சிறப்பாக செய்யக்கூடிய ஆற்றல் கொண்ட தலைவர்கள் ம.இ.காவில் இருக்கின்றனர். இப்போது அரசாங்க பதவிகளில் நாங்கள் இல்லை. பதவியில் இருப்பவர்கள் சேவைகளை செய்யட்டும். நாங்கள் அதனை பார்த்துக்கொண்டிருப்போம் என விக்னேஸ்வரன் தெரிவித்தார்.