ஜெம்போல், டிசம்பர் 26 – நேருக்கு நேர் பார்த்ததில்லை. மாறாக, “ஆன்லைன்” மூலம் மட்டுமே தொடர்பு கொண்டு திருமண சேவைக்கு பணம் செலுத்திய மணமகள் ஒருவர், ஏமாற்றப்பட்டுள்ளார்.
அதனால், திருமணத்திற்கு வந்த விருந்தினர்களுக்காக, அவரும், அவரது குடும்பத்தாருமே சமைக்கும் நிலைக்கு தள்ளப்பட்டனர்.
நெகிரி செம்பிலான், ஜெம்போலை சேர்ந்த, 26 வயதான அப்பெண், ஏப்ரல் மூன்றாம் தேதி, சிலாங்கூர், ஷா ஆலாமை சேர்ந்த திருமண ஏற்பாட்டாளர் ஒருவரை, தொடர்புக் கொண்டது, விசாரணையில் தெரிய வந்துள்ளதாக, ஜெம்போல் மாவட்ட போலீஸ் தலைவர் சுப்ரிடெண்டன் ஹோ சாங் ஹொக் தெரிவித்தார்.
முதல் கட்ட முன்பதிவு தொகையாக, ஈராயிரத்து 780 ரிங்கிட்டை அவர் இணையம் வாயிலாக செலுத்தியுள்ளார்.
அதன் பின்னர், ஜூன் 17-ஆம் தேதி, ஐயாயிரத்து 554 ரிங்கிட்டும், ஆகஸ்ட்டு 30-ஆம் தேதி, நான்காயிரத்து 954 ரிங்கிட்டும் செலுத்தப்பட்டுள்ளது.
இம்மாதம் 24-ஆம் தேதி நடைபெற்ற அவரது திருமண விருந்துபசரிப்பிற்காக, நிறுவனம் ஒன்றின் வங்கிக் கணக்கிற்கு, இணையம் வாயிலாக, அப்பெண் மொத்தம் 13 ஆயிரத்து 200 ரிங்கிட்டை அவர் செலுத்தியது தெரிய வந்துள்ளது.
எனினும், மொத்த தொகையையும் பெற்றுக் கொண்ட, சம்பந்தப்பட்ட “கேட்டரிங்” உணவு விநியோகிப்பாளரை, அதன் பின்னர் தொடர்புக் கொள்ள முடியாமல் போனதால், வேறு வழியின்று, மணமகளும், அவரது குடும்பத்தாரும் சொந்தமாக சமைக்கும் நிலைக்கு தள்ளப்பட்டதாக, ஹோ சொன்னார்.
முகநூல் வாயிலாக அறிமுகமான மோசடி நபரிடம் அப்பெண் பணத்தை கொடுத்து ஏமாந்தது தெரிய வந்துள்ளது.
அதனால், அப்பெண் பணம் செலுத்திய வங்கிக் கணக்கின் விவரங்களை, CCIS – வணிகக் குற்றப்புலனாய்வு அமைப்பின் உதவியோடு அடையாளம் காணும் நடவடிக்கையை போலீஸ் தொடங்கியுள்ளனர்.
அதே சமயம், சம்பந்தபட்ட நிறுவனத்தின் விவரங்கள், மலேசிய நிறுவன ஆணையத்திடமிருந்து பெறப்படுமென ஹோ சொன்னார்.