கோலாலம்பூர், மார்ச் 9 – சிவபெருமானுக்குரிய சிறப்பு விரதமான மகா சிவராத்திரியை உலகம் முழுவதும் உள்ள இந்துக்கள் நேற்றிரவு விமரிசையாகக் கொண்டாடினர்.
நம் நாட்டிலும் சிவன் ஆலயங்கள் மட்டுமின்றி, மற்ற ஆலயங்களிலும் மகா சிவராத்திரி வழக்கம் போல் பக்தர்களால் அனுசரிக்கப்பட்டது.
மகா சிவராத்திரிக்கு புகழ் பெற்ற கோவை ஈஷா யோக மையத்தில், முந்தைய ஆண்டுகளைப் போலவே சிவராத்திரி இவ்வாண்டும் களைக் கட்டியது.
அங்கு பிரபல பாடகர் சங்கர் மஹாதேவன் தலைமையில் சிறப்பு சிவன் பாடல்கள் கச்சேரியும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததால், வருகையாளர்கள் நடனமாடி ‘vibe’ செய்தனர்.
அமெரிக்காவின் நியூ யார்க் டைம்ஸ் சதுக்கத்திலும் மகா சிவராத்திரி சிறப்பாக கொண்டாடப்பட்டது.
அங்கு கூடிய சிவபக்தர்கள் சிவராத்திரியை வரவேற்று உற்சாகமாக ஆடிப் பாடிக் கொண்டாடினர்.
மாசி மாதத்தில் அமாவாசைக்கு முன் வரும் சிவராத்திரி நாள், மகா சிவராத்தி ஆகும்.
“அன்று விரதம் இருந்து வழிபாடு செய்தால் என் பூரண அருளைப் பெறுவதற்கு தகுதியடைவீர்கள்” என சிவபெருமானே சொல்லிய விஷேச விரதமாக இது அனுசரிக்கப்பட்டு வருகிறது.
இந்த சிவ வழிபாடு இந்தியா தாண்டி, இந்துக்கள் வாழும் எல்லா நாடுகளிலும் கொண்டாட்டங்களுக்கு கொஞ்சமும் குறைவில்லாமல் அனுசரிக்கப்பட்டு வருகிறது.
நேப்பாளம், மொரீஷியஸ், வங்காளதேசம், இலங்கை உள்ளிட்ட நாடுகளிலும் மஹா சிவராத்திரி கொண்டாடப்படுகிறது.