கோலாலம்பூர், மார்ச் 14 – ஆண்டுதோறும், பொதுச் சேவை துறையிலிருந்து பணி ஓய்வுப் பெறும் பணியாளர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், நிர்வாக அதிகாரிகள், அரசியல் செயலாளர்கள் மற்றும் நீதிபதிகளுக்கு ஓய்வூதியம் வழங்கும் கடப்பாட்டை அரசாங்கம் கொண்டுள்ளது.
அதற்காக, நிதி ஒதுக்கீடு நூறு கோடி ரிங்கிட்டுக்கும் கூடுதலாக அதிகரித்து வருவதாக, பிரதமர் துறையின், கூட்டரசு பிரதேச அமைச்சர் டாக்டர் ஜலிஹா முஸ்தபா தெரிவித்தார்.
குறிப்பாக, கடந்தாண்டு ஒன்பது லட்சத்து 31 ஆயிரத்து 707 பணி ஓய்வுப் பெற்ற அரசாங்க ஊழியர்களுக்கு, மூவாயிரத்து 201 கோடி ரிங்கிட்டை அரசாங்கம் ஓய்வூதியமாக வழங்கியதை ஜலிஹா சுட்டிக்காட்டினார்.
அந்த தொகை, அதற்கு முந்தைய 2022-ஆம் ஆண்டு, ஒன்பது லட்சத்து ஈராயிரத்து 999 பேருக்கு வழங்கபட்ட நிதியைக் காட்டிலும் 175 கோடி அதிகமாகும்.
2020 மற்றும் 2021-ஆம் ஆண்டுகளிலும், அதே நிலை பதிவானது.
2020-ஆம் ஆண்டு தொடங்கி 2023-ஆம் ஆண்டு வரையில், அரசாங்க ஊழியர்களின் ஓய்வூதியத்திற்காக ஒதுக்கப்பட்ட நிதி குறித்து மக்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு ஜலிஹா இவ்வாறு பதிலளித்தார்.