ஜோகூர் பாரு, ஜன 29 – இணையம் வாயிலாக கிரிப்டோகரன்சி (Cryptocurrency) முதலீட்டுத் திட்டத்தில் 5.07 மில்லியன் ரிங்கிட் இழந்த மக்களிடமிருந்து 12 புகார்களை ஜோகூர் போலீசார் பெற்றுள்ளனர். ஜனவரி 3 ஆம் தேதி முதல் 26ஆம் தேதிவரை 46 முதல் 71 வயதுடையோரிடமிருந்து இந்த புகார்களை பெற்றதாக ஜோகூர் போலீஸ் தலைவர் கமிஷனர் M. குமார் தெரிவித்திருக்கிறார். சமூக ஊடகங்களில் “Accerx” என்ற முதலீட்டுத் திட்டத்திற்கான விளம்பரங்களைக் கண்டதாகவும், குறுகிய காலத்தில் அதிக வருமானம் கிடைக்கும் என அந்த விளம்பரத்தில் தெரிவிக்கப்பட்டிருந்ததை நம்பி பலர் அதில் முதலீடு செய்து ஏமாந்துள்ளனர். அவர்களுக்கு கொடுக்கப்பட்ட செயலியை கிளிக் செய்த பின் ஒரு வாட்ஸ்அப் குழுவில் சேர்க்கப்பட்டதோடு, எவ்வளவு லாபம் ஈட்டப் போகிறோம் என்று அதில் கேட்கப்பட்டதாகவும் பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்தனர். அதோடு தங்களது முதலீடுகளை கண்காணிக்க ஒரு விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து அதில் தங்களைப் பதிவு செய்துகொள்ளும்படி கூறப்பட்டதாகவும் நேற்று வெளியிட்ட அறிக்கையொன்றில் குமார் தெரிவித்தார்.
செயலி மூலம் தாங்கள் கிரிப்டோகரன்சியில் முதலீடு செய்கிறோம் என்ற எண்ணத்தில் அவர்கள் பணப் பரிமாற்றமும் செய்தனர். உண்மையில் தமது முதலீட்டு கணக்கின்படி கூடுதல் வருமானத்தை காட்டியிருக்க வேண்டும் . அந்த வருமானத்தை ரொக்கமாக பெற முயன்றபோது காரணங்கள் கூறப்பட்டதோடு மேலும் பணம் செலுத்தும்படி கேட்டுக்கொள்ளப்பட்டதாக பாதிக்கப்பட்டவர்களில் ஒருவர் தெரிவித்தார். இந்த திட்டத்தில் முதலீடு செய்தவர்கள் ஒவ்வொருவரும் 177,000 ரிங்கிட் முதல் 1.78 மில்லியன் ரிங்கிட் வரை மோசடிக்கு உள்ளானதாகவும் குற்றவியல் சட்டத்தின் 420ஆவது விதியின் கீழ் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக கமிஷனர் குமார் கூறினார்.