ஜோகூர் பாரு , பிப் 13- ஜோகூர் ஆட்சிக்குழுவில் இன்று புதுமுகம் ஒருவர் நியமிக்கப்பட்ட வேளையில் ம.இ.கா இளைஞர் பிரிவின் தலைவரான ரவின்குமார் கிருஷ்ணசாமி தற்போது ஒற்றுமை, கலச்சாரம் மற்றும் பாரம்பரிய துறைக்கு பொறுப்பு வகிக்கும் ஆட்சிக்குழு உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார். தெங்காரோ சட்டமன்ற உறுப்பினரான அவர் இதற்கு முன் சுற்றுலா மற்றும் சுற்றுச் சூழல் துறைக்கு பொறுப்பு வகிக்கும் ஆட்சிக் குழு உறுப்பினராக இருந்து வந்தார். இதற்கு முன்னர் மாநில கல்வித்துறைக்கு பொறுப்பேற்றிருந்த ஆட்சிக் குழு உறுப்பினரும் ஜோகூர் லாமா சட்டமன்ற உறுப்பினருமான நோர்லிசா நோர் ஆட்சிக்குழு மாற்றத்தில் இடம்பெறவில்லை .
அவருக்கு பதிலாக தஞ்சோங் சூராட் சட்டமன்ற உறுப்பினர் அஸ்னான் தமின் கல்வி மற்றும் தகவல் துறைக்கு பொறுப்பான ஆட்சிக்குழு உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார் என ஜோகூர் மந்திரி பெசார் ஒன் ஹபீஸ் காஸி வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்திருக்கிறார். நோர்லிசாவை தவிர இதர அனைவரும் ஆட்சிக் குழுவில் மீண்டும் இடம்பெற்றுள்ளனர். எனினும் சிலரது துறைகள் மாற்றப்பட்டுள்ளன. ஜோகூர் மந்திரிபெசார் ஒன் ஹபீஸ் இயற்கை வளம், நிர்வாகம், நிதி திட்டம், பொருளாதார மேம்பாடு மற்றும் சுற்றுலா துறைக்கான பொறுப்பையும் ஏற்றுள்ளார்.